வலி தாங்க முடியலையே.. 'ஆர்மிகெரஸிடம்' சிக்கித் தவிக்கும் சென்னை மக்கள்!
சென்னை: யாரை வேண்டுமானாலும் நாம் கலாய்க்கலாம், மிரட்டலாம், உருட்டலாம்.. ஆனால் கொசுவிடம் மட்டும் நம்முடைய பாச்சா ஒருபோதும் பலிப்பதில்லை.. இப்போது சென்னை மக்கள் குறிப்பாக வட சென்னை மக்கள் ஒரு வகை கொசுவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதாக சர்வே ஒன்று தெரிவிக்கிறது.
அது ஆர்மிகெரஸ் (Armigeres ) என்ற வகை கொசுவாகும். வழக்கமான ஏடிஸ், அனோபிலஸ் டைப் கொசுக்கள் போல இது கிடையாது. அவற்றை விட வித்தியாசமானது.
ஏடிஸ், அனோபிலஸ் ஆகியவை கடித்தால் டெங்கு, மலேரியா, மூளைக்காய்ச்சல், சிக்குன்குனியா என நோய்கள் பரவும். ஆனால் இந்த ஆர்மிகெரஸ் கடித்தால் நோயெல்லாம் பரவாதாம்.. ஆனால் கடித்தால் வலி பின்னி எடுத்து விடுமாம்.
வலி தாங்க முடியலையே
ஆர்மிகெரஸ் கொசுக்களால் வட சென்னை பகுதி பெரும் அவஸ்தைக்குள்ளாகியு்ளதாக இந்திய பொது சுகாதார அமைப்பின் தமிழக பிரிவின் புள்ளி்விவரத் தகவல் தெரிவிக்கிறது.
நாளுக்கு நாள் பெருகி வரும் ஆர்மிகெரஸ்
ஆர்மிகெரஸ் கொசுக்கள் சென்னையின் வட பகுதியில்தான் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறதாம்.
நோய் வராது.. வலி உயிர் போகும்
இந்த கொசுக்களால் நோய்கள் எதுவும் பரவுவதில்லையாம். மாறால் கடித்த இடத்தில் வலி உயிர் போகும் அளவுக்கு இருக்குமாம்.
கொருக்குப்பேட்டை முதல் காசிமேடு வரை
வட சென்னையின் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ஓட்டேரி, மின்ட், புளியந்தோப்பு, வியாசர்பாடி, பட்டாளம், தண்டையார்பேட்டை, காசிமேடு ஆகிய பகுதிகளில் இந்த வகை கொசுக்கள் பெருமளவில் உலா வந்து கொண்டுள்ளனவாம்.
செப்டிக் டேங்க்தான் இவற்றின் கோட்டை
செப்டிக் டேங்குகள், குப்பைக் கூளங்கள்தான் இவற்றின் பிறப்பிடமாக உள்ளன. தேங்கிக் கிடக்கும் மழை நீரையும் இந்த கொசுக்கள் விடுவதில்லை. இதுபோன்ற இடங்களில்தான் இவை உற்பத்தியாகின்றன. வட சென்னையில் இந்த வகை இடங்களுக்கும், சுகாதாரக் குறைபாட்டுக்கும் குறைவே இல்லை என்பதால் இந்த வகை கொசுக்கள் இங்குதான் அதிகம் உள்ளன.
சைஸ் பெருசு..வலியும் பெருசு
மற்ற கொசுக்களை விட இவை உருவத்தில் பெரியவையாகும். ஆறு மில்லிமீட்டர் நீளமும், 500 முதல் 750 மீடட்ர் உயரத்தில் பறக்கக் கூடியதாகவும் இவை உள்ளனவாம். பறக்கும்போது ஒரு வகையான சத்தம் போட்டபடி பறக்குமாம்.
குழந்தைகளைக் குறி வைக்குமாம்
அதிக அளவில் குழந்தைகளைத்தான் இவை கடிக்கின்றனவாம். தூக்கத்தில் இருப்பவர்களையும் இவை அதிகமாக கடிக்கிறதாம்.
6 மணி மேல் கடிக்க ஆரம்பித்தால்
இந்த வகை கொசுக்கள் மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அதிக அளவில் தங்களது கடிக்கும் பணியை தீவிரமாக செய்வதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த வகை கொசுக்களால் வட சென்னை பகுதி மக்கள் வலியால் அவதிப்படுவதால் இவற்றை ஒழிக்க மாநகராட்சியும் சிறப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாம்.