தாய்ப் பத்திரம்.. அசையா சொத்து பதிவு செய்ய அசல் ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ் அவசியம்: பத்திரப்பதிவு
சென்னை: அசையா சொத்துகளை பதிவு செய்யும் போது, அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் வகையிலான சட்ட முன்வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, இந்த மசோதாவை இன்றைய தினம் தாக்கல் செய்தார்.
அசல் பத்திரம் தொலைந்தாலும் பதிவு செய்யலாம், பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணங்களின் அடிப்படையில் சொத்து சம்பந்தமான ஆவணங்களை சரி பார்த்து பதிவு செய்யலாம், அதற்கு அசல் பத்திரம் இனி தேவையில்லை என நீதிமன்றங்களின் உத்தரவை பின்பற்றக் கோரி, கடந்த மாதம் பத்திரப்பதிவு துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

தமிழக அரசு பிறப்பித்திருந்த இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு பதிவுத்துறைக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். அப்போது ஒரு முக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு விடுத்திருந்தார்.
அசல் ஆவணங்கள் - பெயிரா
அதில், "அசல் ஆவணங்கள் இல்லாமல் ஆவண பதிவினை மேற்கொள்ள சார் பதிவாளர்கள் பலர் மறுக்கின்றனர். இதற்கு காரணம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சாராம்சங்கள் குறித்த தெளிவான புரிதல் இல்லாத காரணத்தினாலும் மேலும் பதிவு செய்வதன் காரணமாக எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்கின்ற அச்ச உணர்வின் காரணமாகவும் பதிவு செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனர்.
அசல் ஆவணங்கள் இல்லாமல் பதிவு செய்வது சம்பந்தமாக சார் பதிவாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், சரியான வழிகாட்டுதலுடன் கூடிய தெளிவான சுற்றறிக்கையினை தாங்கள் வெளியிட்டு தீர்வு காண உதவிட வேண்டும்.
பொது ஆவணங்கள்
அதேபோல, பொதுமக்களின் நலனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிற பொது ஆவணங்களின் (PUBLIC DOCUMENT) அடிப்படையிலும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத் துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கிற பொது ஆவணங்களை (PUBLIC DOCUMENT) சரிபார்த்து பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளுடன் சுற்றறிக்கையினை வெளியிட்டு உதவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அசையா சொத்துக்கள்
இந்நிலையில், சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, அசையா சொத்துகளை பதிவு செய்வது தொடர்பான சட்ட முன்வடிவை இன்றைய தினம் தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது...
அப்போது, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இன்று மசோதா ஒன்றை பேரவையில் தாக்கல் செய்தார். அதன்படி, அசையா சொத்து தொடர்பான ஆவணத்தை பதிவு செய்யும் போது, முந்தைய அசல் ஆவணம் மற்றும் ஆவண பதிவு செய்யும் தேதிக்கு 10 நாட்களுக்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள் தொலைந்தால்
மேற்கண்ட ஆவணங்களை சமர்பிக்காதபட்சத்தில் ஆவணங்கள் மீது சொத்துகள் பதிவு செய்யப்பட மாட்டாது. மேலும், மூதாதையர்கள் சொத்தாக இருந்து அதற்கான அசல் ஆவணங்கள் இல்லையென்றால், வருவாய் துறையால் வழங்கப்பட்ட பட்டாவை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அசல் ஆவணம் தொலைந்துவிட்டால், அந்த ஆவணத்தை கண்டறிய முடியவில்லை என்றால், காவல்துறையால் வழங்கப்பட்ட சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அசையா சொத்துகளை பதிவு செய்யும்போது, அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவு தொடர்பாக அதிமுக சார்பில் எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கருத்துகளை முன்வைக்க அனுமதி கோரினார். இதையடுத்து, இந்த மசோதா நாளைய தினம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விமர்சனம்
முன்னதாக, இன்றைய தினம் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசிய ஸ்டாலின், "கோவையில் கோயில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் என்ன நடக்கிறது? என்பது அனைவருக்கும் தெரியும்.. பிரதமர் மோடி இதுவரை அங்கு சென்று பார்வையிடவில்லை" என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications