வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் ஷாக்?.. இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை! நிபுணர்கள் சொல்வது என்ன?
சென்னை: சென்னை: பெட்ரோல் விலை மறுபடியும் எகிறி உள்ளது. மேற்காசியப் போர் சூழலால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் தொடர் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் மூன்றாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்தத் தொடர் உயர்வு, வரவிருக்கும் கடுமையான பொருளாதார சவால்களை உணர்த்துகிறது. இது குறித்து சந்தை நிபுணர்கள் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கைகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன
மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் உலகளாவிய எரிசக்தி சந்தையை நிலைகுலைய வைத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு, உலக எரிபொருள் விநியோகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய உயிர்நாடியான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள முடக்கம், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாட்டையும் விலை உயர்வும் உருவாக்கியுள்ளது.
இந்த மோதலுக்கு முன்னதாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் 70 முதல் 72 டாலர் வரை விற்பனையாகி வந்த நிலையில், பதற்றத்தின் உச்சத்தில் அதன் விலை 120 டாலரைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
இப்போது கச்சா எண்ணெய் விலை 104 முதல் 110 டாலர் என்ற அளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த சுமை ஒட்டுமொத்த நுகர்வோர் நாடுகளையும் பாதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 4 வருஷமாகவே மாற்றமின்றி இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையில், கடந்த 15-ம் தேதி முதல் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருவது, இறக்குமதிச் செலவை மேலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இழப்பை சமாளிக்க முடியாமல் திணறும் எண்ணெய் நிறுவனங்கள், இந்த விலையேற்றத்தை தவிர்க்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த 15-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதி இரண்டாவது முறையாக பெட்ரோல் லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டன.
லிட்டருக்கு 96.98 ரூபாய்
இந்தச சூழலில், இன்றைய தினம் அதாவது மே 23ம் தேதி, மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொடர் விலை உயர்வின் காரணமாக, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகள் உயர்ந்து 105.31 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகள் உயர்ந்து 96.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த 3வது விலை உயர்வு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் விலை உயர்வு
கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் இந்த ஸ்திரமற்ற தன்மை தொடரும் பட்சத்தில், எரிபொருள் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவிக்கிறார்கள்.. இந்தியா,
இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த எரிசக்தி நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் இந்த மோதல் போக்கு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளின் தினசரி பயணச் செலவுகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து செலவையும் அதிகரித்து, அதன் மூலம் பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது...!!
நிபுணர்கள் வார்னிங்
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்ற இறக்கங்களால், இந்திய எரிபொருள் சந்தையில் தற்போதைய விலை உயர்வு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலருக்கும் அதிகமாக வர்த்தகம் ஆவது இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நிதிச் சுமையை உருவாக்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதுமட்டுமல்ல, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் குறைக்க, தொடர்ந்து விலை உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வருங்காலத்தில் விலை எவ்வளவு?
வருங்காலத்தில் விலை எவ்வளவு உயரும் என்பது கச்சா எண்ணெய் சந்தையின் நிலையற்ற தன்மையைப் பொறுத்தே அமையும் என்பதுதான் தற்போது நிபுணர்களின் கணிப்பாகம்..
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் விநியோகத்தில் சங்கிலியில் ஏற்படும் தடைகள், விலை உச்சத்தை தொடுவதற்கு வழிவகுக்கும் என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது விலை உயர்ந்ததைப் போன்றே, தற்போதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் புதிய உச்சங்களை எட்டக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து செலவு உயர்வு
இந்த தொடர் எரிபொருள் விலை உயர்வு, நாட்டின் ஒட்டுமொத்தப் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் வல்லுநர்கள்.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது போக்குவரத்து செலவுகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விற்கும் நேரடியாகக் காரணமாக அமையும்.
இது சாமானிய மக்களின் வீட்டு பட்ஜெட்டைப் பாதிப்பதோடு, பொருளாதார ரீதியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.. விலை உயர்வைத் தடுக்க அரசு தீர்க்கமான கொள்கை முடிவுகளை எடுக்காவிட்டால், வரும் வாரங்களில் எரிபொருள் விலையில் மேலும் பல மாற்றங்களைக் காண வேண்டியிருக்கும் என்று என்பதே சந்தை நிபுணர்களின் முக்கியமான வார்னிங் ஆகும்..!!












Click it and Unblock the Notifications