கனிமொழி எடுத்து வச்ச முதல் அடியே சக்ஸஸ்... கண்ணம்மா ஜோதிக்கு விசா கிடைச்சாச்சு!
பாடகி ஜோதிக்கு கனிமொழியின் முயற்சியால் விசா கிடைத்துள்ளது
சென்னை: கனிமொழி எடுத்து வெச்ச முதல் அடியே சக்ஸஸ்.. விசா மறுக்கப்பட்ட இளம் பாடகி ஜோதி கலைச்செல்விக்கு தற்போது விசா கிடைத்துவிட்டதாம்.
25 வயதான பாடகர் பிரேம் பகவான் நாகராஜு, 19 வயதான ஜோதி! இவர்கள் இருவரையும் இங்கிலாந்தில் உள்ள பாரகன் என்ற அமைப்பின் சார்பில் இசை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தனர். இவர்களை சென்னையில் உள்ள தேவசித்தம் சாரிட்டபிள் பவுண்டேஷன் என்ற அமைப்பு அழைத்துச் செல்லவிருந்தது.
ஆனால் ஜோதி மற்றும் பிரேம் இருவரும் பார்வையற்றவர்கள் என்பதைக் காரணம் காட்டி இங்கிலாந்து அரசு விசா மறுத்தது. அதேசமயம், குழுவில் உள்ள மற்றவர்களுக்கு விசா கொடுக்கப்பட்டது. இதனால் மிகபெரிய பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் கனிமொழி எம்பி தலையிட்டார்.
கனிமொழி
இதுதொடர்பாக அவர் போட்ட டிவீட்டில், "மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த பார்வையற்ற இரு இளம் கலைஞர்களும் இங்கிலாந்துக்கு சென்று தாங்கள் பங்கேற்கத் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உதவ வேண்டும்" என்று கனிமொழி கேட்டுக் கொண்டார்.
சுஷ்மா
எம்பியாக பதவி ஏற்ற மறுநாளே இந்த கோரிக்கையை கனிமொழி வைத்திருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது. ஏனென்றால், சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரச்சனை என்றால், இப்படித்தான் கனிமொழி பிரச்சனையை சுஷ்மாவிடம் கொண்டு போவார். சுஷ்மாவும், கனிமொழியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உதவுவார்.
ஜெய்சங்கர்
அதனால் தற்போதைய அமைச்சர் ஜெய்சங்கரும் கனிமொழியின் கோரிக்கைக்கு உதவுவாரா என்ற எதிர்பார்ப்பும் பலமாக எழுந்தது. அதன்படியே ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்துவிட்டார். உடனடியாக டெல்லியிலிருக்கும் இங்கிலாந்து அரசின் தூதரகத்தை தொடர்புகொண்டு பேசினார்.
விசா கிடைத்தது
இதையடுத்து, பார்வை குறைபாடுள்ள இளம் பாடகர்களுக்கு உடனடியாக விசா தர சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜெய்சங்கர் பேசி, அடுத்த அரைமணி நேரத்தில் இந்த விசா கிடைத்துள்ளது. இதனால் பாடகர்கள் பிரேம் மற்றும் ஜோதி கனிமொழிக்கு மனசார நன்றியை தெரிவித்து கொண்டுள்ளனர்.