கருணாநிதி பிறந்த நாள் அஞ்சலியில் தனியாக வந்த கனிமொழி.. என்ன காரணம்?
முக்கிய பதவி கிடைக்காததால் வருத்தத்தில் கனிமொழி உள்ளதாக சொல்லப்படுகிறது
சென்னை: என்ன ஜெயித்து என்ன.. முக்கியமான பதவி தனக்கு கிடைக்காமல் போச்சே என்று எம்பி கனிமொழி கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறாராம்!
கருணாநிதி இறந்தவுடன் கட்சிக்குள் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக ஒதுங்கி இருந்தார் கனிமொழி. இதை பார்த்ததும், புதிய தலைவர் ஸ்டாலின் ஓரங்கட்டுகிறார், ஒதுக்குகிறார் என்று பலர் சரமாரியாக வாய்க்கு வந்ததையெல்லாம் சொன்னார்கள். இதற்கு எந்தவித கருத்தையும் சொல்லாமல் நாகரீக அரசியல் போக்கையே கடைபிடித்து வந்தார் கனிமொழி.
கடைசியில், பொறுமை காத்த கனிமொழியை அவர் ஆசைப்பட்டபடியே தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக களம் இறக்கினார் கட்சி தலைவர். பிரச்சாரம் செய்ய போனபோதுகூட 'பார்லிமெண்ட் டைகர்' என்று வைகோ டைட்டிலை எடுத்து தங்கைக்கு சூட்டி பெருமைப்படுத்தினார்.
திண்ணை பிரச்சாரம்
இதையடுத்து ஸ்டாலினின் திண்ணை பிரச்சாரத்திலும் கனிமொழி பங்கு கொண்டு, வீட்டுக்கு வீடு சென்று வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி பிரச்சாரத்தின்போது, தெற்குமயிலோடை பகுதியில் திமுகவில் எழுந்த ஒரு சர்ச்சை பேச்சுக்கு கனிமொழியை சிலர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அதனை அண்ணனுக்காக நாசூக்காக சமாளிக்கவே செய்தார். தொகுதியில் பலத்த வெற்றி பெற்றார்.. மீண்டும் எம்பி ஆனார்!
எம்பிக்கள் கூட்டம்
இதுவரை எல்லாத்தான் நல்லா போய்ட்டு இருந்தது.. ஆனால் கடந்த 25ம் தேதி முக ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடந்ததில் இருந்துதான் ஏதோ மனக்கசப்பு வந்துள்ளது. புதிதாக வெற்றி பெற்ற எம்பிக்கள் முதல் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் அந்த கூட்டத்தில், கனிமொழி நாடாளுமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
டிஆர் பாலு
இதனால் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் பதவி யாருக்கு? என்பதில் திமுகவுக்குள் பலத்த போட்டி இருந்ததாம். குறிப்பாக இந்த பதவியை பிடிக்க மூத்த தலைவர் டிஆர் பாலு - கனிமொழி இடையேதான் அதிகமாக ரேஸ் இருந்துள்ளது.
துணைத்தலைவர்
தேசிய அளவில் 3- வது பெரிய கட்சியாக உருவாகி உள்ளது திமுக. 37 எம்பிக்களோ பாராளுமன்றத்தில் நுழைவதே பெரிய கெத்துதான். இதில் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் என்பது அதைவிட மகத்தானது. அதனால்தான் இந்த பொறுப்பு தனக்கு தரப்படும் என்று பெரிதும் நம்பி உள்ளார் கனிமொழி. ஆனால், டிஆர் பாலுவுக்கு அந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது. திமுக மக்களவை குழு துணை தலைவராகவே கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.
தனிநபராக அஞ்சலி
இந்தத் தேர்வு கனிமொழிக்கு கசப்பை கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதற்கு பிறகு அமைதியாகவே உள்ளார். இன்னும் சொல்ல போனால் கொஞ்சம் வருத்தத்திலும் இருக்கிறார் போல தெரிகிறது. அது கருணாநிதி பிறந்த நாள் அன்று அப்பட்டமாகவே தெரிந்துவிட்டது. கருணாநிதி உருவப்படத்துக்கு ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர்.
முணுமுணுப்பு
அந்த நிகழ்ச்சியில் கட்சி சார்பாககூட கனிமொழி கலந்து கொள்ளவில்லை. அவர்கள் எல்லாம் சென்ற பிறகு தனியாக வந்துதான் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார். ஏன் தனியாக வந்து செல்கிறார் என்ற முணுமுணுப்பு அப்போதே கட்சிக்குள் எழ ஆரம்பித்து விட்டதாம்!