ரெடியா இருங்க.. திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
கனிமொழி மகளிரணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழையின் காரணமாகத் மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் குளங்களாக மாறியுள்ளன.. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன... மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது..
சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. சுரங்கப்பாலங்கள் மூடப்பட்டுள்ளன.. மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலான மாவட்டங்களில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர்
சென்னையில் 2 நாள் மழையின் தாக்கம் இன்னும் நீடிக்கிறது.. மாநகராட்சி நிர்வாகம் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது... திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 17 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான சம்பா, தாளடி நெற்பயிர்களும், 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான குறுவை பயிரும் பாதிக்கப்பட்டுள்ளன.

நிவாரண பணிகள்
திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில், மழை நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் 3வது நாளாக இன்றும் களத்தில் நேரடி ஆய்வில் ஈடுபட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.. அதேபோல அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. வீடுகளுக்குள் புகுந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணிகளில் மும்முரமாகி உள்ளனர்.

அறிவிப்பு
இதனிடையே, தமிழகத்திற்கு வருகிற 10ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மக்களை மேலும் கலங்க வைத்து வருகிறது.. அதுமட்டுமல்லாமல், இனி கனமழை தொடரும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையமும் அறிவித்துள்ளது.. அதிலும் குறிப்பாக, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கை தேவை என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.

திமுக
இந்நிலையில்தான், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை இருக்குமாறு திமுக மகளிரணிக்கு எம்பி கனிமொழி அறிவுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது: "வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பொழியும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகளிரணி
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மகளிரணி சகோதரிகள், தங்கள் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை செய்ய தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மகளிரணியினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், நிவாரணப் பணிகளின் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications