கெட்ட பெயர்தான் அதிகம்! இனிமே பூட்டை ஆட்டாதீங்க! பட்டென சொன்ன திமுக எம்பி.. நடந்தது என்ன?
சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பரிந்துரை வழங்கும் வழக்கம் நீக்கப்பட்டது பற்றி திமுக ராஜ்ய சபா எம்பி எம்.எம் அப்துல்லா தெரிவித்த கருத்து ஒன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்பிக்கள் பரிந்துரை மூலம் மாணவர்கள் சேரும் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக இந்த முறை இன்னும் கைவிடப்படவில்லை என்றாலும், மறு அறிவிப்பு வரும் வரை இந்த முறை நடைமுறையில் இருக்காது என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி கழகம் அறிவித்துள்ளது.
முன்னதாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்பிக்கள் பரிந்துரையின் பெயரில் மாணவ, மாணவியர் சேர முடியும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி
ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட மாணவ, மாணவியர், அந்த தொகுதி எம்பி பரிந்துரை மூலம், அதே தொகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர முடியும். 6ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கும் இந்த வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. அதன்பின் 2016ல் இந்த வழக்கம் 10ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டது.

எம்பி பரிந்துரை
ஆனால் தற்போது புதிய உத்தரவில் மாணவர் சேர்க்கைக்கு இனி பரிந்துரைகள் மேற்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்பிக்கள் பரிந்துரைகளின் கீழ் சிறப்பு ஒதுக்கீடுகளின் கீழ் யாரையும் சேர்க்க கூடாது. இதன் மூலம் செய்யப்படும் மாணவர் சேர்க்கைகளை உடனே நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிகளுக்கு அவசர கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவசர கடிதம்
இது தொடர்பாக திமுக ராஜ்ய சபா எம்பி எம்.எம் அப்துல்லா தெரிவித்த கருத்தில், ஒரு எம்.பி பத்து மாணவர்களைப் பரிந்துரைக்கலாம் என்ற நடைமுறை இருந்தது. இதுவரை 364 பேர் என்னிடம் பரிந்துரைக் கடிதம் கேட்டு மனு அளித்து இருந்தார்கள். அத்தனை பேருமே முக்கியமானவர்கள்தான்! இந்த கேந்திரிய வித்யாலயா பரிந்துரைகளால் எம்.பி களுக்கு இடம் கிடைத்தவர்களிடம் ஏற்பட்ட நல்ல பெயரை விட செய்ய முடியாமல் போனதால் பிறரிடம் ஏற்பட்ட கெட்ட பெயரே மிக மிக மிக அதிகம்.

கடும் விமர்சனம்
இந்த நடைமுறை நீக்கப்பட்டதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியே! தயவு செய்து இனி யாரும் பூட்டை ஆட்ட வேண்டாம், என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை நீக்கப்பட்டதை சில எம்பிக்கள் வரவேற்றுள்ளனர். சில எம்பிக்கள் இதை எதிர்த்துள்ளனர். காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இந்த நடைமுறை நீக்கப்பட்டது எம்பிக்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications