சென்னை வேளச்சேரி டூ பரங்கிமலை.. விரைவில் பறக்கும் ரயில் சேவை.. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.. ஆஹா
தற்போது ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே தூண்கள் அமைக்கப்பட்டு மற்ற கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 3 மாதங்களில் முடிவடைந்துவிடும் எனத் தெரிகிறது.
சென்னை: சென்னை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நடந்து வந்த பறக்கும் ரயில் கட்டுமானப் பணிகள் 3 மாதங்களில் முடிவடையும் என தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் மக்கள் பயன்பாட்டுக்காக இந்த பறக்கும் ரயில் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த தகவல், சென்னைவாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இப்பகுதியில் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டால், ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.

பறக்கும் ரயில் சேவை
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பறக்கும் ரயில் சேவை கடந்த 1997-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை இது முதல்கட்மாக இயக்கப்பட்டது. பின்னர், வேளச்சேரி வரை இது நீட்டிக்கப்பட்டது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் முதலில் 6 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு 9 பெட்டிகளுடன் இயங்கி வருகிறது.

பரங்கிமலை வரை நீட்டிப்பு..
இதன் தொடர்ச்சியாக, இந்த பறக்கும் ரயிலை பரங்கிமலை (ST Thomas Mount) வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டு 3 கி.மீ. தூரத்துக்கு கட்டுமானப் பணிகள் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. அதன்படி, வேளச்சேரி - புழுதிவாக்கம் - ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளமும் பதிக்கப்பட்டது. ஆனால், ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்துக்கு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த மார்க்கத்தில் உள்ள வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றதால் இந்த முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனால் 11 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

சூடுபிடித்த பணிகள்
இந்த சூழலில், கடந்த 2020-ம் ஆண்டு அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதால் அங்கு பணிகள் மீண்டும் நடைபெற தொடங்கின. அதன்படி, ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே தூண்கள் அமைக்கப்பட்டு மற்ற கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் 3 மாதங்களில் முடிவடைந்துவிடும் எனத் தெரிகிறது. அதன் பின்னர், பரங்கிமலை வரை பறக்கும் ரயில் இயக்கப்படும்.

"ஓரிரு மாதங்களில் முடிவடையும்"
இந்நிலையில், இதுகுறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டப் பணிகளை அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன. தற்போது அந்தப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் பணிகள் முடிவடைந்துவிடும். அதன் பின்னர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த பறக்கும் ரயில் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார்" என்றார்.












Click it and Unblock the Notifications