பாலியல் வன்கொடுமை வழக்கில், முகிலன் திடீர் கைது!
Recommended Video
சென்னை: கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சமூக செயல்பாட்டாளர் முகிலன் கைது செய்யபட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார் முகிலன். ஆனால் அதன்பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் மாயமானார்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் அம்மாநில போலீசாரால் முகிலன் நேற்று இரவு கைது செய்யப்பட்டதை அறிந்து அவர்களை தொடர்பு கொண்டு தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, தமிழக காவல்துறையிடம் ஆந்திர போலீசார் முகிலனை நேற்று இரவு ஒப்படைத்தனர். சென்னை அழைத்துவரப்பட்ட முகிலனிடம் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று மாலை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே முகிலன் மீது, காவல்துறையினர், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதன்பேரில் தான் இந்த கைது நடவடிக்கை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே முகிலன், மாயமானது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக முதல் கட்டமாக எழும்பூர் நீதிமன்றத்தில் நாளை முகிலனை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர். இதையடுத்து பாலியல் வழக்கில் அவரை ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற உள்ளனர்.
இந்த வாரண்டை பெற்றுக்கொண்டு கரூர் நீதிமன்றத்தில் நாளையே, முகிலனை ஆஜர்படுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.