இஸ்லாமிய பெண்கள் இப்போது தான் உயர்கல்வி கற்க முன் வருகிறார்கள்! ஹிஜாபுக்கு கருணாஸ் ஆதரவு!
சென்னை: இஸ்லாமிய மாணவிகள் இப்போது தான் உயர்கல்வி கற்க முன்வருகிறார்கள் என்றும் அதை சீர்குலைக்க முயலும் விஷ விதைகளை முக்குலத்தோர் புலிப்படை எதிர்க்கும் எனவும் அதன் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மதவெறியை, பயங்கரவாதத்தை வளர்க்கும் எந்த நாடும் வளர்ச்சி அடைந்ததாக வரலாறு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வேற்றுமையில் ஒற்றுமை
இந்திய திருநாடு அதன் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பன்மை கலாச்சாரத்திற்காகவே உலக அளவில் போற்றப்படுகிறது.கெளதம புத்தரும், திருவள்ளுவரும்,விவேகானந்தரும், காந்தியும் இந்தியாவின் புகழ் முகங்களாக திகழ்கிறார்கள். இந்த பெருமைகளை சீர்குலைக்கும் வகையில் பெரும்பான்மை மதவாதத்தை முன்னிறுத்தி நாட்டில் வெறுப்பு அரசியலை முன்னிறுத்தும் தீய சக்திகளின் செயல்பாடுகள் வளர்ந்து வருவது அறுவெறுப்பை தருகிறது.

ஹிஜாப் எனும் மேலாடை
கர்நாடாகாவில் ஹிஜாப் எனும் மேலாடையை அணிந்து செல்லும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக சங்பரிவார ஆதரவாளர்கள் நடத்திடும் அச்சுறுத்தல்கள் நாகரீகமற்றவை. அவரவர் தங்களது கலாச்சாரத்தை விரும்பி பின்பற்றும் உரிமையை சட்டம் வழங்கியிருக்கிறது. அந்த மாணவிகளின் ஆடை கலாச்சாரம் அடுத்தவர்களை பாதிக்கவில்லை. அவர்களோடு படிக்கும் சக மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் அதை எதிர்க்கவில்லை.

நேச உணர்வு
வெளிநபர்கள் காவித் துண்டுகளை அணிந்து அவர்களை சுற்றி வளைக்கும் போது, அந்த மாணவிகளின் மன உணர்வுகள் என்ன பாடுபட்டிருக்கும்?
அந்த நேரத்திலும் ஒரு மாணவி தன்னந்தனியாக தனது உரிமை முழக்கத்தை உரக்க முழங்கியிருப்பது நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அதை இந்து சமுதாயத்தவர்களே ஆதரித்து, ட்விட்டரில் ஹேஷ் டேக்கை பரப்பி தங்கள் நேச உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சங்பரிவார ஆதரவாளர்கள்
இது தான் நமது பண்பாடு என்பதை சங்பரிவார ஆதரவாளர்கள் உணர வேண்டும். விபூதியுடனும், பொட்டுடனும் வலம் வருவது இந்துக்களின் உரிமை. சிலுவை அணிந்து வருவது கிருஸ்தவர்களின் உரிமை. தலையில் டர்பன் கட்டி வருவது சீக்கியர்களின் உரிமை.அசோக சக்கரத்தை கழுத்தில் அணிந்து வருவது பெளத்தர்களின் உரிமை. இது போல் ஹிஜாப் ஆடை அணிவதும், தொப்பி அணிவதும் முஸ்லிம்களின் உரிமை.
இவற்றை மதித்து சகிப்புத்தன்மையுடன் வாழ்வதுதான் நாகரீக சமூகத்திற்கு அழகாகும்.

கல்வி வளாகங்கள்
முஸ்லிம் சிறுபான்மை சமூக மக்கள் இப்போது தான் உயர் கல்வியை நோக்கி செல்ல தொடங்கியிருக்கிறார்கள். அச்சமூக பெண்களும் உயர் கல்வியை நோக்கி பயணிக்க தொடங்கியிருக்கும் நிலையில், கல்வி வளாகங்களில் நட்பையும், நேசத்தையும் பாழ்படுத்தும் பாதக செயலை கர்நாடக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மதவெறியை, பயங்கரவாதத்தை வளர்க்கும் எந்த நாடும் வளர்ச்சியை பெறாமல் , அமைதி இழந்து சீரழிவை நோக்கி செல்வதை உலகம் கவனிக்கிறது.

சமூக நல்லிணக்கம்
அந்த நிலை நமது நாட்டுக்கு ஏற்படாமல் சமூக நல்லிணக்கத்தை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. நமது தமிழ் மண்ணில் இத்தகைய விஷ விதைகளை ஊன்ற துடிக்கும் தீய சக்திகளுக்கு எதிராக முக்குலத்து புலிப் படை களம் காணும் என்பதை பசும்பொன் தேவர் திருமகனார் வழியில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மை முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அச்சப்பட வேண்டியதில்லை.












Click it and Unblock the Notifications