முல்லைப்பெரியாறு அணை.. மரங்களை வெட்ட கேரளா அனுமதி.. பினராயி விஜயனுக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி!
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்கு கீழே உள்ள பதினைந்து மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

நீண்ட கால கோரிக்கை
இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், பேபி அணை மற்றும் மண் அணையை வலுப்படுத்த இந்த நீண்ட கால கோரிக்கை மிகவும் முக்கியமானது என்றும், இந்தக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த அனுமதி தங்களுக்கு உதவும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கேரள அரசுக்கு நன்றி
இந்த அனுமதியை வழங்கியமைக்காக கேரள அரசுக்கும் கேரள முதலமைச்சர் அவர்களுக்கும், தமது அரசு சார்பிலும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இது இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும் வகையில் அமையும் என்றும் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் நம்புவதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சாலையைச் சீரமைக்க வேண்டும்
முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்துவதற்கும், அணையின் கீழ்ப்பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழகத்தின் உறுதிப்பாட்டை தான் மீண்டும் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வண்டிப் பெரியாறு மற்றும் பெரியாறு அணைப் பகுதிக்கு இடையே உள்ள சாலையைச் சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்குமாறு, தமிழ்நாட்டின் சார்பில் வந்துள்ள முக்கியமான கோரிக்கைகளையும் விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மிக அவசியம்
பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல இந்தச் சாலைப் பணிகள் மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ள அவர், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மரங்கள் வெட்டுவதற்கான அனுமதியை வழங்கிய கேரள முதலமைச்சர் அவர்களுக்கும், கேரள அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications