கோயம்பேட்டில் கூட இல்லாத வசதி... சென்ட்ரலுக்கு நிகராக மாறப்போகும் கிளாம்பாக்கம்.. இதை பாருங்க
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்படி வேறு மாதிரி மாறப்போகிறதோ அதுபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் மல்டி மாடல் போக்குவரத்து மையமாக மாறப்போகுகிறது. கிளாம்பாக்கத்தில் டவுன் பஸ் பேருந்து நிலையம், விரைவு பஸ் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ நிலையம், புறநகர் ரயில் நிலையம், ஆட்டோ நிலையம், பூங்கா, வணிக வளாகங்கள் என பல்வேறு வசதிகளுடன் மல்டி மாடல் நிலையமாக கிளாம்பாக்கம் முனையம் உருவாகப் போகிறது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகரில் வெளியூர் பேருந்துகளால் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னை கோயம்பேட்டில் இருந்து இருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தாம்பரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தள்ளி, வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் பிறகு அரசு பேருந்துகள் மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்து சென்றன. அதன் பின்னர் படிப்படியாக ஆம்னி பேருந்துகள் வந்து செல்ல தொடங்கின. அதன்பிறகு கடைகள், ஓட்டல்கள், மெடிக்கல்கள், ஏடிஎம்கள் என பல்வேறு வசதிகளும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் வந்தன. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. தினசரி 65,000 முதல் ஒரு லட்சம் பேர் வந்து செல்கிறார்கள்.
ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதேபோல் மிக மிக அதிக வாகனங்கள் கடந்து செல்லும் கிளாம்பாக்கம் வண்டலூரை இணைக்கும் ஜிஎஸ்டி சாலையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதாவது கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், ஜி.எஸ்.டி., சாலையில், 74.50 கோடி ரூபாயில், நடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
இதேபோல் சென்னை விமான நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ள மெட்ரோ ரயிலை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலக்ஷ்மி நகர், திருவிக நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் என்று 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் உயர்மட்ட பாதையில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு மெட்ரோ ரயில் கிடைப்பது உறுதியாகி விடும். கிளாம்பாக்கம் என்பது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் போல் அனைத்து வசதிகளும் கொண்ட மிகப்பெரிய போக்குவரத்து முனையமாக மாறப்போகிறது. அடுத்த 20 வருடங்களில் செங்கல்பட்டு வரை சென்னை சந்திக்க போகும் மிகப்பெரிய வளர்ச்சியை கருத்தில் கொண்டு மல்டி மாடல் திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது.
ஊரப்பாக்கம் சிக்னல் தொடங்கிவண்டலூர் உயிரியல் பூங்கா வரை ஏராளமான வசதிகளை அரசு மேற்கொள்ள போகிறது. ஏனெனில் இப்போதைய நிலையில் கிளாம்பாக்கம் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கிறது. துறைமுகம் செல்லும் லாரிகள், தாம்பரம் செல்லும் வாகனங்கள், செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள், காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள், ஓஎம்ஆர், ஈசிஆர் சாலையில் செல்லும் வாகனங்கள் எல்லாமே சந்திக்கும் இடமாக கிளாம்பாக்கம் இருப்பதால், கோயம்பேட்டைவிடவும் மிகப்பெரிய வளர்ச்சியை கிளாம்பாக்கம் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கிளாம்பாக்கத்தை ஒட்டியுள்ள கூடுவாஞ்சேரி , அண்ணா நகருக்கு நிகராக வளருவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுவதால் அந்த பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications