மும்பை அணி கப்பலில் விழுந்த ஓட்டைகள்.. கரை சேர்ப்பாரா நாயகன் ரோகித் சர்மா? ஒரு பார்வை!
சென்னை: ஒரு காலத்தில் கடப்பாரை அணியாக பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ், கடந்த இரு சீசன்களில் மோசமான தோல்விகளை சந்தித்து பரிதாபத்திற்குரிய அணியாக மாறியுள்ளது. அவர்களால் நடப்பு ஐபிஎல் தொடரில், கம்பேக் கொடுக்க முடியுமா என்பதை பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தவிர்க்க முடியாத அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் தான். 5 முறை சாம்பியன் என்ற அசைக்க முடியாத சாதனைகள் கொண்டு மும்பை அணி, கடந்த முறை யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
14 போட்டிகளில் 10 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், இறுதிக் கட்டத்தில் வெற்றிக்காக போராடிய மும்பை அணியை பார்த்து, அடுத்த ஆண்டில் கம் பேக் கொடுப்போம் என்று மும்பை ரசிகர்கள் சூளுரைத்தார்கள்.

கேமரூன் கிரீன்
அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மும்பை அணியின் தயாரிப்புகள் ஏலத்தில் இருந்தே தொடங்கியது. பொல்லார்ட், பாண்டியா சகோதரர்களின் ஆல் ரவுண்டிங் ஆட்டத்தை ஈடு செய்யும் வகையில் மும்பை அணியின் திட்டங்கள் இருந்தன. அதற்கேற்ப கேமரூன் கிரீனை கோடிகளை கொட்டிக் கொடுத்து வாங்கியது.

ஆர்ச்சரின் கம்பேக்
ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன் பும்ரா, ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகியிருப்பது அந்த அணிக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பும்ரா ஒரு முனையில் இருந்து பிரஷர் போட்டாலும், இன்னொரு முனையில் ரன்கள் கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்ய ஆர்ச்சர் வரவுள்ள நிலையில், பும்ரா விலகியிருக்கிறார். இதனால் மும்பை அணிக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் பெஹரண்டார்ஃப் மட்டும் தான்.

இஷான் கிஷன் தொடக்கம்
இதில் ஒருவர் சொதப்பினாலும் மும்பை அணியின் பந்துவீச்சு படை மொத்தமாக இழப்பை சந்திக்கும். அதேபோல் கார்த்திகேயா, ரமன்தீப் சிங் கடந்த முறை குறை சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டிருந்தாலும், சுழற்பந்துவீச்சு பலமில்லாமல் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இரட்டை சதத்திற்கு பின் இஷான் கிஷன் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.

ரோகித் சர்மா பேட்டிங்
இவர் தான் இப்படியென்றால், ரோகித் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நல்ல ஃபார்மில் விளையாடி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. கிட்டத்தட்ட சென்னை அணி ரசிகர்கள் தோனியிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாமோ, அதேபோன்ற எதிர்பார்ப்பையே ரோகித் சர்மா மீதும் வைப்பதே ரசிகர்களின் மனதிற்கு நல்லது. ஏனென்றால் அனைத்து அணிகளிலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சரிவர பொருந்தி இருக்கிறார்கள்.

கரை சேருமா மும்பை?
அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டரில் வரும் திலக் வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் மீதும் விமர்சனம் இல்லாமல் இல்லை. அதுமட்டுமல்லாமல் கேமரூன் கிரீனை எந்த இடத்தில் மும்பை நிர்வாகம் களமிறக்க போகிறது என்பதில் இதுவரை தெளிவில்லாமல் உள்ளது. இத்தனை ஓட்டைகளையும் அடைத்து மும்பை அணியின் கப்பல் நடப்பு ஐபிஎல் சீசனில் கரை சேர்ந்தால், ஐபிஎல் தொடருக்கும் நல்லதே.












Click it and Unblock the Notifications