Exclusive: ''எம்.எல்.ஏ.சீட் வாங்க யாரையும் காக்கா பிடிக்கவில்லை''- கேப்டன் தமிழ்ச்செல்வன்
திருச்சி: மும்பையின் கோலிவாடா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த கேப்டன் தமிழ்ச்செல்வன். இந்நிலையில் தீவிர பிரச்சாரத்திற்கிடையே ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: மராட்டியர்கள் மண்ணில் தமிழரான உங்களுக்கு 2-வது முறையாக எம்.எல்.ஏ. சீட் கிடைத்தது எப்படி?
பதில்: கடந்த 2014-ம் ஆண்டு மும்பையின் கோலிவாடா தொகுதி எம்.எல்.ஏ.வாக முதல்முறை தேர்வானேன். கடந்த 5 ஆண்டுகளும் தொகுதி மக்களுக்காக கடுமையாக உழைத்துள்ளேன். நான் ஆற்றிய பணிகள் தொடர்பாகவும், மக்கள் யாரை மீண்டும் விரும்புகிறார்கள் என்றும் கட்சி சர்வே நடத்தியது. அதில் எனது செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததால் தலைமை மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது. ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை உணர்ந்து உண்மையாக உழைத்தால் வாய்ப்பு தானாக தேடி வரும். மற்றபடி நான் எம்.எல்.ஏ.சீட் வாங்க யாரையும் காக்காபிடிக்கவோ, டெல்லிக்கு பிளைட்டில் பறக்கவோ இல்லை.
கேள்வி: கடந்த 5 ஆண்டுகளாக கோலிவாடா தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? நீங்கள் செய்த பணிகளில் சிலவற்றை கூறமுடியுமா?
பதில்: என் தொகுதியில் சேரியில் வசிக்கும் மக்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் நோக்கில் சேரியிலிருந்து அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்ற கடினமாக உழைத்துள்ளேன். முதியோர் உதவித்தொகை வழங்கும் விவகாரத்தில், நானே வீடு வீடாக சென்று முதியோர்கள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை பெற்றுத்தந்திருக்கிறேன். இதைத்தவிர கோலிவாடா பகுதியில் மழைபெய்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த மூன்றாண்டுகளாக அதுபோல் தண்ணீர் தேங்கி நிற்காத அளவிற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன். சாலைகள் அமைத்து கொடுத்திருக்கிறேன். இளைஞர்களுக்கு நூலகங்கள், ஜிம்கள், என பல வசதிகள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன்.
கேள்வி: மராட்டியம் மராட்டியர்களுக்கே என்பது சிவசேனாவின் வாதம், அப்படியிருக்க அந்தக் கட்சியுடனான உங்கள் தொடர்பு எப்படி?
பதில்: நான் பாஜகவில் இருக்கிறேன். எங்கள் கட்சி சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதனால் கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் சிவசேனாவுடன் இணக்கமாகத் தான் செல்கிறேன். சிவசேனா என்றில்லை பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் நெருக்கமாகத் தான் இருக்கிறேன்.
கேள்வி: மஹாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், நீங்க அமைச்சர் ஆயிடுவிங்கன்னு கூறப்படுகிறதே?
பதில்: தமிழரான எனக்கு மும்பையில் 2-வது முறையாக போட்டியிட எம்.எல்.ஏ.சீட் கொடுத்ததற்காக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அமைச்சர் பதவி கிடைக்கிறதோ இல்லையோ அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. மக்களுக்கு உழைக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைப்பயன்படுத்தி நான் என் வேலையை செய்துகொண்டே இருப்பேன். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் என்ன முடிவு எடுப்பார் என எனக்குத் தெரியாது.
கேள்வி: மராட்டிய அரசியல் - தமிழக அரசியல் இதைப்பற்றிய உங்கள் பார்வை என்ன?
பதில்: மஹாராஷ்டிராவை பொறுத்தவரை அரசியல்வாதிகள் மக்களுக்கு யதார்த்தமாக கீழிறங்கி வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் இங்கு மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். தமிழக அரசியலை பற்றி எனக்குத் தெரியாது, நீங்கள் தான் சொல்ல வேண்டும்.(சிரிக்கிறார்)