'I.N.D.I.Aவை' உருவாக்கியது முதல்வர் ஸ்டாலின்தான்.. ரெய்டுக்கு காரணமே இதுதான்! முரசொலி விமர்சனம்
சென்னை: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்நிலையில், இந்த கூட்டணியை உருவாக்கியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் எனவேதான் அவரது அமைச்சர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் எனவும் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சித்துள்ளது.
மூன்றாவது முறையும் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பாடுகள் அமைந்துள்ளன. கடந்த மாதம் பாட்னாவில் 17 எதிர்க்கட்சிகள் கூடிய நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் மீண்டும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 26 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பாஜக வயிற்றில் புளியை கரைத்தது.

இந்நிலையில் தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் ரெய்டை மேற்கொண்டனர். இந்த ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை என திமுக விமர்சித்துள்ளது. 11 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கை கையில் எடுத்து ரெய்டு நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கையின்றி வேறென்ன? என்று திமுக தலைவர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், "INDIA என்ற கூட்டணியை உருவாக்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். அதனால்தான் திமுகவிற்கு குறி வைக்கப்படுகிறது என முரசொலி விமர்சித்துள்ளது. அதாவது, "இந்தியாவுக்கு எதிராக மோடி இருப்பதால். மோடிக்கு எதிராக INDIA என்ற பெயரில் நாட்டை நாசமாக்கிய பா.ஜ.க. கூட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் அணி சேர்ந்துள்ளன 26 கட்சிகளின் Lella Indian national developmental inclusive alliance என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு கூட்டணியை இந்தியா முழுமைக்கும் உருவாக்க அயராது பாடுபட்டவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். கடந்த மார்ச் 1ம் தேதி சென்னையில் நடந்த தனது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசும் போது இதற்கான பாதையை வகுத்துக் கொடுத்தார். காஷ்மீரத்து சிங்கம் பரூக் அப்துல்லா, பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் தேஜஸ்வீ, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் ஆகியோர் அந்த மேடையில் இருந்தார்கள். பா.ஐ.க.வை வீழ்த்த நினைக்கும் அரசியல் கட்சிகள் எத்தகைய முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பதை மார்ச் 1ம் தேதியே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தம் ஆகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி -ஒற்றைத் தன்மை எதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கும் பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும் - அது ஒன்றுதான் நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும். ஒற்றைத் தன்மை கொண்டதாக நாட்டை மாற்ற நினைக்கும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கு கொண்டதாக பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் திட்டமிட்டு ஒன்று சேர வேண்டும். பா.ஜ.க.வை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்லிவிடலாம் என்று அறிவுறுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன். தமிழ் நாட்டில் கடந்த நான்காண்டு காலமாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த ஒற்றுமை ஒன்றுதான் அந்த வெற்றிக்கு அடிப்படையாகும்.
இதனை 2021 ஆம் ஆண்டே சேலம் பொதுக்கூட்டத்தில் அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை வைத்துச் சொன்னேன். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமையுங்கள் என்று சொன்னேன் என்பதைச் சொல்லிவிட்டு மிக மிக வெளிப்படையாக சில கருத்துகளை அப்போது முதலமைச்சர் சொன்னார்.
பா.ஜ.க.வை எதிர்க்கும் சில கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து செயல்படத் தயங்கியது. இதனால் பயனில்லை என்பதையும் முதன் முதலாகச் சொன்னது தமிழ்நாடு முதலமைச்சர்தான்.
அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து - விட்டுக் கொடுத்து - பா.ஜ.க.வுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் - என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது. இதனை பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் - என்று வெளிப்படையாகவே முதலமைச்சர் சொன்னார்.
பா.ஜ.க. - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி முயற்சிகள் அனைத்துக்கும் அன்றைய தினமே முற்றுப்புள்ளி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மூன்றாவது அணி நோக்கத்துடன் தன்னைச் சந்தித்தவர்களிடமும் முதலமைச்சர் இதனை வலியுறுத்தினார். மூன்றாவது அணி என்பது பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே ஆகும்' என்ப தைச் சொன்னார். இதற்குப் பிறகுதான் மூன்றாவது அணி எண்ணத்தில் இருந்த சில தலைவர்கள் மனம் மாறினார்கள்.
காங்கிரஸையும் உள்ளடக்கிய கூட்டணியால் மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற சிந்தனையை விதைத்தவர் மு.க.ஸ்டாலின்தான். மார்ச் 1 ஆம் தேதி போட்ட விதை என்பது சூலை 18 அன்று முளைத்திருக்கிறது. Indian national developmental inclusive alliance - என்பதாக முளைத்திருக்கிறது. INDIA வை உருவாக்கியவராக M.K.STALIN உயர்ந்து நிற்கிறார்.
இது நம்மை விட பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்கு தெரியும். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் குறி வைக்கப்படுகிறது. அமலாக்கத்துறையை ஏவி விடுகிறார்கள். பெங்களூரு கிளம்பும் முன் ரெய்டு நடத்தினால் பயந்து விடுவார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். பாட்னா கூட்டம் முடிந்ததும் மத்தியப்பிரதேசத்துக்குப் போன பிரதமர், அங்கும் தி.மு.க.வை தான் திட்டினார். பெங்களூரு கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அந்தமான் விமான நிலைய புதிய முனையத்தை காணொளி மூலமாக தொடங்கி வைக்கும் போதும் தி.மு.க.வையே விமர்சித்தார். INDIA வை உருவாக்கியவர் M.K.S. என்பதை அவர் அறிவார். அதனால் தான் இந்தளவுக்கு வன்மம் கக்குகிறார்கள். அமலாக்கத் துறைகளை ஏவுகிறார்கள்.
அவர்களால் இன்னும் பல கொடுமைகள் நடக்கும்' என்பதை எதிர்கொள்ளும் நெஞ்சுரத்துடன் முதலமைச்சர் கூறியுள்ளார். இத்தகைய கொடுமைகளுக்கான தண்டனைகளும் பா.ஜ.க.வுக்கு நிச்சயம் கிடைக்கும்" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications