சமூகநீதியை கையிலெடுத்தது மகிழ்ச்சியே! இளையராஜாவை விட்டுவிடுங்கள்.. முரசொலி தலையங்கம் சொன்ன செய்தி
சென்னை: இசைஞானி இளையராஜா ஒரு படைப்பாளி அவரை விட்டு விடுங்கள் என முரசொலியில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாளிதழில் வெளியான செய்தியில், அவர் ஒரு படைப்பாளி! அவரை விட்டு விடுங்கள் தேவையற்ற அவரே விரும்பாத விவகாரங்களில் அவரை நுழைத்து அவரது சிந்தனைகளைச் சிதறடித்து விடாதீர்கள்! அவரது ஆற்றல், சிகரங்கள் பலவற்றைத் தொட்டுவிட்டன. இருந்தும் அவரது தேடல் நிற்கவில்லை.
ஆம் உண்மை படைப்பாளிகளுக்கு முற்றும் என்ற சொல் நிறைவளிப்பதில்லை. தொடரும் என்ற சொல்லே அவர்களது வேட்கையின் வெளிப்பாடு! எல்லையற்ற இலக்கு! இசைஞானி இளையராஜா ஒரு உண்மை படைப்பாளி, அவரை விவாத பொருளாக்கி அவர் இலக்கை மடைமாற்றி திசை திருப்பாதீர்கள்! இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி வழங்கப்பட்ட செய்தியை இன்று விவாதப் பொருளாக்கியுள்ளனர் சிலர்!

சாதி சாயம்
அவருக்கு அளிக்கப்பட்ட பதவிக்கு சாதிச் சாயம் பூசிக் களிக்கிறார்கள் சிலர். அவர் சாதிகளைக் கடந்தவர், மதங்களைக் கடந்தவர் என்பதால்தான் அவருக்கு "இசைஞானி" என்ற பட்டத்தை கருணாநிதி தந்து பாராட்டினார். எத்தனையோ பட்டங்களைப் பெற்றார் இளையராஜா ! ஆனால் கருணாநிதி தந்த இசைஞானி பட்டம் அவர் பெயரோடு இணைந்துவிட்டது. ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத சொல்லாகப் பிணைந்துவிட்டது ! உள்ளார்ந்த உணர்வுகளில் உருவாகி சூட்டப்பட்ட பட்டம் என்பதால் அது உயிரோட்டம் கொண்டுள்ளது.

எல்லை
இசையில் இசைஞானி இளையராஜா தொட்ட எல்லை, தொட நினைக்கும் எல்லை நீண்டு கொண்டே இருக்கிறது! உங்கள் அரசியல் விளையாட்டில் அவரை இழுக்காதீர்கள்! அவர் சொல்லும் வேகத்துக்கு தடை ஏற்படுத்தாதீர்கள்! அவர் பெற்றிடும் ஒவ்வொரு உயர்வும், தமிழன் பெருமிதம் கொள்ளும் உயர்வு! இளையராஜாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த கழகத் தலைவர் தளபதி இசையால் நம் உள்ளங்களையும், மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்! எனத் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்!

இளையராஜா
இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக்கியதில் மகிழ்ச்சிதான்! இப்படிப்பட்ட நியமன உறுப்பினர்கள் பதவியை இதற்கு முன் திரையுலகைச் சேர்ந்த ஹேமா மாலினி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நர்கீஸ், வைஜெயந்தி மாலா, ரேகா, ப்ரித்வி, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர் சோ ராமசாமி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி போன்றோர் பெற்றிருக்கிறார்கள்.

விவாதம்
அப்போதெல்லாம் உருவாகாத விவாதம், இப்போது இசைஞானி இளையராஜா நியமனத்தில் எழுந்துள்ளது எதனால் என்பதை, சிறிது அலசிப் பார்த்தால் அதற்கான காரணம் விளங்கிவிடும்! இசைஞானிக்குக் கிடைத்துள்ள இந்த நியமனப் பதவி குறித்து யாரும் விமர்சிக்காத நிலையில் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத போது ஏன் இது விவாதப் பொருளானது என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

வலதுசாரிகள்
வலதுசாரிகள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு ஊடக விவாதங்களில் ஈடுபடும் ஒரு பிஜேபி ஆதரவு கூட்டம் இதில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது! இத்தனை ஆண்டு காலம் ஆண்டவர்கள் யாரும் தராத ஒரு உயர்வை ஏதோ பிஜேபி இளையராஜாவுக்கு தந்தது போல பேசுகிறார்கள். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளையராஜாவுக்கு பதவி தந்து சமூகநீதியைத் தாங்கள்தான் காப்பது போல பேசத் தொடங்கியுள்ளனர்.!

மகிழ்ச்சிதான்
நமக்கெல்லாம் இதில் ஒரு மகிழ்ச்சிதான் காலம் காலமாக சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்த கூட்டத்தை இன்று சமூகநீதி பற்றி பேச வைத்துள்ளது, திராவிட இயக்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். சமூகநீதி காக்க மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்திய சமூகநீதி காவலன் வி பி சிங் அரசைக் கவிழ்த்து கொண்டாட்டம் நடத்திய கூட்டம் இன்று பழங்குடியினப் பெண்மணியை குடியரசுத் தலைவர் வேட்பாளராகவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கும் தேர்வு செய்திட வேண்டிய நிலையை உருவாக்கிய வகையில் திராவிட இயக்கம் பெற்ற பெரு வெற்றி அது.

ஆர் எஸ் எஸ் கூட்டம்
ஆர் எஸ் எஸ் கூட்டம் பசுந்தோல் போர்த்தி வந்தாலும் ஆட்டுத் தோல் போர்த்தி வந்தாலும் அதன் உண்மைச் சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டிடுவோம்! உங்கள் அரசியல் எத்து விளையாட்டுகளை அரசியல்வாதிகளோடு நேரடியாக நடத்திடுங்கள்! படைப்பாளிகளை அதில் பகடைக்காயாக்க கருதாதீர்கள்! நாடாளுமன்ற மேலவைப் பதிவு தந்ததன் மூலம் இசைஞானி இளையராஜாவை பெருமைப்படுத்தியது போல பேசாதீர்கள்!
Recommended Video

உலகம் வேறு
அவரது உலகம் வேறு! அந்த இசை உலகின் உச்சப் பதவிகள் பட்டங்கள் பலவற்றை அவர் பெற்றுவிட்ட நிலையிலும் அவரது தாகம் தணியவில்லை, வேகம் குறையவில்லை நிறைய சாதிக்க வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்! அரசியல் விளையாட்டுகளை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள். படைப்பாளிகளை விட்டுவிடுங்கள்! இளையராஜா வர்ணாசிரம தருமப்படி தலையில் பிறக்காவிடினும் இசை உலகம் அவரைத் தலையில் தாங்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறது! தலையில் பிறந்தவர்களுக்கே எல்லா தகுதியும் என கூறித் திரியும் கூட்டத்தின் தலைகனத்தைத் தகர்த்து இசை பேருருவாய் எழுந்து நிற்கும் அந்த இசைஞானியை இசை பேரொளியை உங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பரப்புரை நடத்திடப் பயன்படுத்தாதீர்கள் அவரை விட்டுவிடுங்கள். ஆம் அவர் ஒரு படைப்பாளி! அவர் சிந்தனையோட்டத்தைச் சிதறடித்து விடாதீர்கள்! இவ்வாறு முரசொலியில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications