கதைக் கரு மட்டும்தான் ஒன்று... மற்றபடி இரண்டுக்கும் தொடர்பில்லை.. முருகதாஸ் விளக்கம்
Recommended Video
சென்னை: சர்கார் படத்தின் கதையும் செங்கோல் என்ற கற்பனை கதை ஆகியவற்றின் கரு ஒன்றுதான். மற்றபடி இரண்டு கதைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விளக்கமளித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் என்ற படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜயின் அரசியல் பேச்சு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
மேலும் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சினிமா ஆர்வலர்களும் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது கதையை திருடி சர்கார் என பெயரிட்டுள்ளதாக வருண் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் அப்படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. தீபாவளிக்கு படம் வெளிவருமோ வராதோ என ரசிகர்களும் படக்குழுவினரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சுந்தர் முன்பு இன்று வந்தது.
அப்போது கதாசிரியர் வருணுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார். இதையடுத்து படம் திரையிடும் போது வருண் ராஜேந்திரனின் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என்று முருகதாஸ் கூறினார். இதையடுத்து இப்பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இதையடுத்து இயக்குநர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான ஓட்டை கள்ள ஓட்டாக அடுத்தவன் போடுவது. நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம். ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது.
இந்த அநீதியை எதிர்த்து தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்குமென. எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது. பின் மாதக்கணக்கில் விவாதித்து திரைக்கதை எழுதி சர்கார் என்ற திரைப்படத்தை இயக்கி எடுத்தேன், இதே கற்பனைக் கரு ஒரு உதவி இயக்குநர் திரு. வருண் ராஜேந்திரனுக்கும் உதித்து எனக்கு முன்பே எங்களது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.
அதே கருவை அவரும் சிந்தித்து எனக்கு முன்பே பதிவு செய்திருந்த படியால், வளர்ந்து வரும் உதவி இயக்குநர் வருணை பாராட்டி அவர் உழைப்பையும் கௌரவிக்கும் வகையில் இதை பதிவு செய்து ஊக்குவி்கிறேன்.
திறமையுள்ள ஒரு சக உறுப்பினரை திரை உலகுக்கு அடையாளம் காட்டிய நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.