சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த நாட்கள் அழகானவை - ஆதங்கத்தை வெளிப்படுத்திய குஷ்பு
சேப்பாக்கம் திருவல்லிகேணி தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார் குஷ்பு. இருந்தாலும் 3 மாதங்கள் தனக்கு பணிபுரிய வாய்ப்பளித்த கட்சித்தலைமைக்கு நன்றி கூறியுள்ளார் குஷ்பு.
சென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை பாஜகவிற்கு தராமல் பாமகவிற்கு கொடுத்திருப்பது குஷ்புவுக்கும் பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்செட் ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் 3 மாதங்கள் தனக்கு பணிபுரிய வாய்ப்பளித்த கட்சித்தலைமைக்கும் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக வழக்கம்போல தேர்தல் ரேஸில் முந்திக்கொண்டுள்ளது. 177 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகி விட்டது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கும், பாஜகவிற்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேட்ட தொகுதிகளில் பல தொகுதிகள் கிடைத்திருந்தாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ராஜபாளையம் தொகுதிகள் கிடைக்கவில்லை.
Thank you @BJP4India @narendramodi ji @JPNadda ji @AmitShah ji@BJP4TamilNadu @Murugan_TNBJP ji @CTRavi_BJP ji @blsanthosh ji @ReddySudhakar21 ji @kishanreddybjp ji for giving me the opportunity to work at the ground level. 🙏🙏🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 11, 2021
வருத்தமும் நன்றியும்
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட தனக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்படும் என்று நம்பினார் குஷ்பு. இதற்காக பல மாதங்களுக்கு முன்பிருந்தே சேப்பாக்கம் தொகுதியில் அடிப்படை வேலைகளை ஆரம்பித்தார். பாஜக வேட்பாளராக குஷ்பு களமிறங்குவார் என்றும் நட்சத்திர தொகுதியாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அடிப்படை வேலைகளை செய்ய வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.
|
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி
இந்த பயணத்தில் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இங்கு ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்காக என்னை நம்பினர். அனைவருக்கும் நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். கடந்த 3 மாதங்கள் அழகான நாட்களாக இருந்தன. வளமானவை, நல்ல பாடம் கற்றுக்கொண்டேன். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி உடனான எனது உறவு மறக்கமுடியாதது என்று பதிவிட்டுள்ளார்.
|
வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு
குஷ்புவிற்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மனதிற்கு நெருக்கமான தொகுதியாக மாறிவிட்டது. வீடு வீடாக சென்று பாஜகவிற்காக வாக்கு சேகரித்திருக்கிறார். அந்த தொகுதி மக்களுக்கு அறிமுகமான நபராகவும் மாறிவிட்டார். பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் வெற்றிவாய்புள்ள ஒரு தொகுதியை குஷ்புவிற்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எம்எல்ஏ கனவு நனவாகுமா?
திமுக, காங்கிரஸ் கட்சியில் இருந்த போது குஷ்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமே செல்வார். தொகுதியில் அடைப்படை கட்டமைப்புவரை இறங்கி வேலை செய்ததில்லை. பாஜகவில் இணைந்த பிறகுதான் பல போராட்டங்கள், யாத்திரை, பேரணியில் அதிகமாக பங்கேற்றார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த உழைப்பு அவருக்கு வேறு தொகுதியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 2021 சட்டசபைத் தேர்தல் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்குள் எம்எல்ஏவாக செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications