வலிப்பு இல்லை..ராஜசேகரை கொடுங்கையூர் போலீசார் அடித்தே கொன்று விட்டனர்..குற்றம் சாட்டும் தாயார்
ராஜசேகரை அடித்து கொன்றுவிட்டனர் என்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் உயிரிழந்த ராஜசேகரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். வலிப்பு வந்து இறந்ததாக போலீசார் பொய் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை: விசாரணை கைதி ராஜசேகர் வழக்கில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவரது தாயார் உஷா கூறியுள்ளார். ராஜசேகரை அடித்து கொன்றுவிட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Recommended Video
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் அப்பு என்ற ராஜசேகர்,31 இவர், பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளார்.
இவர் மீது சோழவரம், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 22க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தமிழகத்தை உலுக்கிய கொடுங்கையூர் லாக்அப் மரணம்.. 5 போலீசார் சஸ்பெண்ட்.. மாஜிஸ்திரேட் விசாரணை
திருட்டு வழக்கில் விசாரணை
இந்தநிலையில் கொடுங்கையூர் போலீசார் நேற்று முன்தினம் ஒரு திருட்டு வழக்கில் விசாரணைக்காக ராஜசேகரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை அவரிடம் இருந்து திருட்டு நகையை பறிமுதல் செய்வதற்காக போலீசார் ராஜசேகரை வெளியே அழைத்து வந்தனர். அப்போது ராஜசேகர் திடீரென மயங்கி விழுந்தார்.
உயிரிழந்த ராஜசேகர்
உடனடியாக அவரை போலீசார் கொடுங்கையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ராஜசேகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி அறிந்த ராஜசேகரின் உறவினர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன்பு திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
5 போலீசார் சஸ்பெண்ட்
கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய சென்னை கூடுதல் ஆணையர் அன்பு, ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார். ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை. ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.
மாஜிஸ்திரேட் விசாரணை
கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கைதி இறந்தது குறித்த விசாரணை சிபிசிஐடி போலீஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் எஸ்.ஐ. உள்பட 5 பேரிம் கெல்லீஸ் 12வது சிறார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி விசாரணை மேற்கொண்டார்.
அடித்து கொன்று விட்டனர்
இதனிடையே தனது மகன் ராஜசேகரை அடித்து கொன்றுவிட்டனர் என்று அவரது தாயார் உஷா கூறியுள்ளார். வலிப்பு வந்து உயிரிழந்ததாக போலீசார் பொய் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார். ராஜசேகருக்கு எந்த நோயும் இல்லை; சில ஆண்டுகளாக எதற்கும் மருத்துவமனைக்கு சென்றதில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.