மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம்.. அமிர்தாஞ்சன் நிறுவனம் பல கோடி தரணும்.. ஏன் தெரியுமா?
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 14 கிரவுண்ட் நிலத்தை அமிர்தாஞ்சன் நிறுவனம் 2018-ம் ஆண்டே தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டாலும், அவர்கள் நிலத்தை வைத்திருந்த காலத்திற்கான (2001-2018) பல கோடி ரூபாய் வாடகை பாக்கியை தற்போது வட்டியுடன் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏனெனில் நிறுவனம் செலுத்த வேண்டிய ₹9.74 கோடி வாடகை நிலுவைத் தொகையை இந்து அறநிலையத்துறைக்கு செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 14 கிரவுண்ட் 910 சதுர அடி நிலம், ஆகஸ்ட் 28, 1901 அன்று, பி.ஆர். சுந்தர ஐயர் என்பவருக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அப்போது அதன் மாத வாடகை வெறும் ₹1,400 ஆகும். அந்த நபர் ராமாயி அம்மாள் என்பவருக்கு குத்தகை உரிமையை மாற்றினார். அவரிடமிருந்து அமிர்தாஞ்சன் நிறுவனம் அந்த நிலத்தைப் பெற்று, பல தசாப்தங்களாக அதே ₹1,400 வாடகையில் இயங்கி வந்தது. 99 ஆண்டு கால குத்தகை ஆகஸ்ட் 27, 2000 அன்று முடிவடைந்தது. குத்தகை முடிந்த பிறகும், நிறுவனம் நிலத்தை காலி செய்யவில்லை.

2001 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நிலத்தை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் நிறுவனம் வெளியேறவில்லை. 2005-ல் அமைக்கப்பட்ட குழு, சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள அந்த நிலத்திற்கு சந்தை மதிப்பின்படி மாத வாடகையை ₹3.3 லட்சம் என நிர்ணயித்து, 2001-ம் ஆண்டிலிருந்து நிலுவைத் தொகையைக் கேட்டது. ஆனால் தொகையை அந்நிறுவனம் செலுத்தவில்லை.. 2018-ம் ஆண்டு வரை அந்த நிலத்தை நிறுவனம் தன் வசம் வைத்திருந்தது. இதற்காக மொத்தம் ₹9.74 கோடி வாடகை பாக்கி உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
முன்னதாக வாடகை தொடர்பாக அமிர்தாஞ்சன் நிறுவனம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், "வாடகை தொடர்பான மேல்முறையீடு செய்யும்போது நிலுவைத் தொகையை முன்கூட்டியே டெபாசிட் செய்ய வேண்டும்" என்ற சட்டப்பிரிவு (Section 34A(5)) செல்லாது என அறிவிக்கக் கோரியது. ஆனால் 2025-ல் தனி நீதிபதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து நிறுவனம் செய்த மேல்முறையீட்டு மனுவைத்தான் தற்போது தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதி காரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு விசாரித்து வந்தது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறும் போது, நிறுவனம் முறையாக மேல்முறையீடு செய்ததற்கோ அல்லது அதிகாரிகள் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லி வற்புறுத்தியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. "பழைய தீர்ப்புகளில் குறிப்பிட்டது போல, வாடகை வருமானத்தை நம்பியே மத நிறுவனங்கள் உள்ளன. முன்கூட்டியே டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்தால், கோவில்களால் சொத்துகளைப் பராமரிக்கவோ, ஆன்மீகக் கடமைகளைச் செய்யவோ முடியாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நிலுவைத் தொகையை வசூலிக்க அறநிலையத்துறைக்கு அனுமதி அளித்தனர். இதன் மூலம், 2018 வரை நிலத்தை வைத்திருந்த காலத்திற்கான ₹9.74 கோடி நிலுவைத் தொகையை அமிர்தாஞ்சன் நிறுவனம் செலுத்த வேண்டியது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications