மக்களே உஷார்.. மத்திய அரசே விற்கும் இரிடியம்!.. பல கோடி ரூபாய் வருமானம்.. ஏமாந்து விடாதீர்கள்
சென்னை: ரிசர்வ் வங்கியின் மூலமாக மத்திய அரசே இரிடியம் விற்பனை செய்து வருவதாகவும், இதில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் கூறி ரூ. 4.50 கோடியை மர்ம கும்பல் மோசடி செய்துள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது
ஈமு கோழி மோசடி, இரிடியம் மோசடி, சிலை மோசடி, முதலீடு செய்தால் இரட்டிப்பு லாப மோசடி என டிசைன் டிசைனாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து மோசடி சம்பவங்களில் சிக்கும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.

சமீபத்தில் கோவை மாவட்டத்தில் ஆப்பில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால் லட்சங்களில், கோடிகளில் வருமானம் எனக் கூறி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சிபிசிஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள மோசடி சம்பவம் வேற ரகத்தில் உள்ளது. அதாவது, ரிசர்வ் வங்கியின் மூலமாக மத்திய அரசே இரிடியம் விற்பனை செய்து வருவதாகவும், இதில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றும் கூறி ரூ. 4.50 கோடியை மர்ம கும்பல் மோசடி செய்துள்ளதாக சிபிசிஐடி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, சிபிசிஐடி போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டு மே மாதம், மத்திய அரசு ரிசர்வ் வங்கி வாயிலாக இரிடியம் விற்பதாகக் கூறி மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் என ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் கென்னடி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகார் மனு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சேலம் சிபிசிஐடி போலீசார் கடந்த மார்ச்சில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நித்யானந்தம் (44), சந்திரா (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதன் பின்னர், தர்மபுரி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் தெலுங்கானாவைச் சேர்ந்த கிஷோர்குமார் (45) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் பல இடங்களில் 20 பேரிடம் 4.50 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
முதலீட்டாளர்களை நம்பவைப்பதற்காக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் கூட்டம் நடத்தி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல், சிலரை நடிக்க சொல்லி நம்பவைத்துள்ளனர். போலி ஆவணங்கள் வாயிலாக வங்கி கணக்கு துவங்கி, இதில் தான் இரிடியம் தொடர்பாக ரிசர்வ் வங்கி பண வரவு வைக்கிறது எனக் கூறி மோசடி செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications