தமிழக கடலோரத்தில் தென்பட்ட துடுப்பு மீன்கள்! அழிவின் அறிகுறியா? டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்குவது ஏன்?
சென்னை: தமிழக கடலோரத்தில் மீனவர்களின் மீன் பிடி வலையில் அண்மையில் டூம்ஸ்டே மீன்கள் எனப்படும் துடுப்பு மீன் பிடிபட்டுள்ளது. இந்த மீன்கள் கரை ஒதுங்கினால் இயற்கை பேரழிவுக்கான அறிகுறி என மக்கள் மத்தியில் குறிப்பாக ஜப்பானியர்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால் தமிழக கடலோரத்தில் கரை ஒதுங்கியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை மீன்கள் கரை ஒதுங்குவது ஏன்? என்பது தொடர்பாக சொல்லப்படும் பல்வேறு காரணங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் கடலோரத்தில் அரிய வகை ஊர்க் மீன் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்கடலில் வாழும் இந்த மீன், மேற்பரப்பில் அரிதாகவே காணப்படும் உயிரினமாகும். ஜப்பானிய நம்பிக்கையின்படி, இது இயற்கை பேரழிவுகளின் அறிகுறியாக கருதப்படுகிறது. சமீபத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கலிபோர்னியாவில் இந்த மீன் தென்பட்டது.

தமிழக கடல் பகுதியில்
இதனால் விஞ்ஞானிகள் மத்தியில் இது ஆர்வத்தையும், மக்களிடையே அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. தற்போது தமிழக கடலோரத்தில் இந்த மீன் தென்பட்டுள்ளது. இந்த மீனை மீனவர்கள் 7 பேர் பிடித்து வைத்து இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சில வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், மீனவர்கள் தங்கள் கைகளில் அந்த மீனை பிடித்து வைத்துக்கொண்டு இதுதான் உலகம் அழியப்போற மீன் என சொல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
எதனால் கரை ஒதுங்குகின்றன?
இந்த மீன் வெள்ளி நிற உடலுடன், தலையின் அருகே சிவப்பு நிற கொண்டை போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. பொதுவாக ஆழமான நீரில் வாழும் இது, உடல்நிலை பாதிக்கப்படும் போது அல்லது இனப்பெருக்க காலங்களில் மட்டுமே மேற்பரப்பிற்கு வருகிறது என்று கூறப்படுகிறது. 2011 ஜப்பான் சுனாமி மற்றும் 2023 தைவான் பூகம்பத்திற்கு முன்பாக இந்த மீன் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானியர்களின் பழைய நம்பிக்கையின்படி, ஊர்க் (துடுப்பு மீன்கள்) மீன் மேற்பரப்பில் தோன்றுவது வரவிருக்கும் பேரழிவுகளின் எச்சரிக்கையாக கருதப்பட்டது. சிலர் பெரிய பூகம்பங்களுக்கு முன்பு இவை கரை ஒதுங்குவதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இந்த மீன்கள் கடலுக்கு அடியில் நில அதிர்வுகளை உணரும் திறன் கொண்டவை என்றும், அதனால் மேற்பரப்பிற்கு வருவதாகவும் இருப்பினும், இது தொடர்பான எந்தவித அறிவியல் ஆதாரமும் இதுவரை இல்லை.
அடிக்கடி கரை ஒதுங்கும் துடுப்பு மீன்கள்
தமிழ்நாட்டில் ஊர்க் மீன் தென்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை வைத்து நெட்டிசன்களும் பரபரப்பாக பதிவிட்டு வருகிறர்கள். Oarfish- எனப்படும் இந்த வகை துடுப்பு மீன்கள் 11 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. சதைப்பகுதி குறைவானதாகவும் பாம்பு போல இந்த மீன்கள் இருக்கும்.
வழக்கமாக ஆழ்கடலில் மட்டுமே இவை வாழும். உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது உயிரிழக்கும் தருவாயிலோ.. இனப்பெருக்க காலத்திலோ மட்டுமே இது கரை ஒதுங்கும். இந்த மீன்கள் கரை ஒதுங்குவது அரிதானதாக தெரிந்தாலும் சமீப காலமாக அடிக்கடி கரை ஒதுங்குவதை பார்க்க முடிகிறது. முன்னதாக இந்த மாத துவக்கத்தில், தாஸ்மானியா நாட்டில் கரை ஒதுங்கின.
அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் கலிபோர்னியா கடலோர பகுதிகளிலும் மெக்சிகோ பசிபிக் கடலோர பகுதிகளிலும் தென்பட்டன. தமிழக கடலோர பகுதிகளில் இந்த மீன் தென்பட்டு இருப்பதால் ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications