ரோட்டில் கிடந்த 'மர்ம' பெட்டி.. உள்ளே லாக்கர்.. திறந்து பார்த்த போலீசாருக்கு ஷாக் - சென்னையில் பரபர!
சென்னை : சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் மர்ம பெட்டி ஒன்று கிடந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் பெட்டிக்குள் வெடிபொருள் இருக்கலாம் என்ற அச்சத்தில் வெடிபொருள் நிபுணர்களை வரவழைத்து சோதனை நடத்தினர்.
அந்தப் பெட்டிக்குள் இருந்த லாக்கரில் கள்ள நோட்டுகளை தயாரிக்கும் உபகரணங்கள் இருந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். சென்னையில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் மர்ம பெட்டி
சென்னை துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலை, ராஜிவ்நகர் சிக்னல் அருகே, பெரிய பெட்டி ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது. இதைப் பார்த்த கண்ணகி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ் என்பவர், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.

பெட்டிக்குள் லாக்கர்
அந்தப் பெட்டி மிகவும் கனமாக இருந்ததால் அதனுள்ளே வெடிபொருள் ஏதேனும் இருக்கலாம் என்ற சந்தேகத்தால், தாம்பரம் காவல் ஆணையரக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்து அவர்களை வரவழைத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், கிராம நிர்வாக அலுவலர் பாக்கியலட்சுமி முன்னிலையில் பெட்டியை திறந்தபோது, அதில் இரும்பு லாக்கர் இருந்துள்ளது.

கள்ள நோட்டு மெஷின்
லாக்கரை இரும்பு சுத்தியல், இரும்பு வெட்டும் கருவி ஆகியவற்றின் உதவியுடன் உடைத்துப் பார்த்தனர். அந்த லாக்கருக்குள் 35 கட்டு வெள்ளைத் தாள்களும், மூன்று இங்க் பாட்டில் மற்றும் சில உபகரணங்கள் இருந்துள்ளன. அந்த உபகரணங்கள் கள்ள நோட்டு அடிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என தெரியவந்தது.

கள்ள நோட்டு கும்பல்
அந்த பெட்டியை கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பல் வீசிவிட்டு சென்றிருக்கலாம் அல்லது கள்ள நோட்டு அச்சடிக்கும் தொழிலில் ஈடுபடலாம் என பணம் பறிக்கும் கும்பல் தவறவிட்டதாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications