Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான்கு முறை முதல்வர்! 75வயதில் ‘பவர் மேன்’ - புதுவை ரங்கசாமி ரகசியம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு மாநிலக் கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியதன் மூலம், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் ஒரு புதிய சாதனையை உண்டாக்கி இருக்கிறது.

புதுச்சேரியின் சக்திவாய்ந்த அரசியல் தலைவராகத் தன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. சாமானியனைப் போல் தோற்றத்தில் தெரியும் இவர் சரியான 'அரசியல் சாணக்கியர்' என்கிறார்கள் புதுவையின் அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்கள். ரங்கசாமிக்கு 75 வயது. இந்த வேகாத வெயிலில் அவர் அனல் பறக்கும் தேர்தல் களத்தில் தாக்குப் பிடித்து நிற்கிறார்.

N Rangasamy

பொதுவாக யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் வாடை அதிகம் வீசும். மக்கள் இன்னும் தேசிய கட்சியின் நிழலில் ஆறுதல் பெறுவதையே விரும்புகிறார்கள். அந்த நம்பிக்கையை உடைத்துக் காட்டியவர் ரங்கசாமி. 1967இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அல்லாத ஒரு மாநிலக் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததைப்போன்று ரங்கசாமி, காங்கிரஸ் என்ற காளையை வீழ்த்தி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தார்.

ரங்கசாமி ஃபார்முலா

அதற்கு முன்னால் இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் முதல்வராக இருந்தார். ஆனால், எந்த முடிவையும் காங்கிரஸ் தேசிய தலைமையைக் கேட்டுத்தான் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததை உணர்ந்தார். ஒரு கைப் பாவையாகத் தான் அமர்ந்துள்ளோம் என்பதை உணர்ந்து, மாநில அரசியலில் ஒரு மௌனமான மாற்றத்தை உண்டாகினார்.

புதுச்சேரியில் சட்டமன்றத்திற்கு மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளன. இந்த எண்ணிக்கை மிகக் குறைச்சல். தமிழ்நாட்டில் ஒப்பிடுகையில் ஒரு வார்டு கவுன்சிலர் போன்ற பரப்பளவுதான். ஆகவே, பெரிய அளவுக்குத் தேர்தல் களத்தில் உழைப்பைக் கொட்டத் தேவையில்லை. நான்குமுறை நடந்தாலே பாதி தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிடலாம்.

காங்கிரஸ் முதல்வராக இருந்தபோது ரங்கசாமி, தன்னை ஓர் எளிய மனிதராகக் கட்டமைத்தார். பெரிய ஆடம்பரம் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துவருவதாக மக்கள் மனதில் பதியவைத்தார். அவரை வீட்டில் சென்று எளிமையாகச் சந்திக்க முடியும். இந்த எளிய காரணங்களே அவரை வாழும் 'காமராஜ்' இடத்திற்கு உயர்த்திவிட்டது. 'மக்கள் முதல்வர்' என்ற அடையாளத்தைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டது.

தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி மக்கள் அதிகமுறை ஆளுநர் ஆட்சியின் கீழ் வாழவேண்டி இருந்தது. 1968 முதல் தொடங்கி 74, 78, 83, 91 எனப் பல முறை துணைநிலை ஆளுநர் ஆட்சி நடந்துள்ளது. அதுவும் காங்கிரஸ் மத்தியில் அதிகாரம் மிக்கதாக ஆட்சியிலிருந்த காலத்தில்.
இதற்குத் தீர்வு மாநில அந்தஸ்து பெறுவதே என்ற முழக்கத்தை முன்வைத்தார் ரங்கசாமி.

இவரிடம் காங்கிரசின் மனப்போக்குடன் ஒரு வலதுசாரி தன்மையும் கலந்திருந்தது. எனவே, 2011 என்.ஆர்.காங்கிரஸ் என்பது தமிழ்நாட்டில் உருவான தாமாகவைப் போன்று திடீர் பிரசவத்தில் பிறந்தது. விளைவு, 30 ஆண்டுகள் அரசியல் களத்தில் அசைக்கமுடியாத தலைவராக உயர்ந்துவிட்டார் என்.ரங்கசாமி. அதற்குப் பின்னால் அவரது சமூக பலமும் மறைமுகமாக உதவியுள்ளது. இந்த முறை அவர் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் காங் முதல்வர் வைத்தியலிங்கம் களம் காண்கிறார். எனவே போட்டி வலிமையாகி உள்ளது.

அனல் பறக்கும் தட்டாஞ்சாவடி

ரங்கசாமி, பல இலவசத் திட்டங்களை அறிவித்து ஆட்சியைப் பிடிப்பதில் வல்லவர். மேலும் கடந்த 2001முதலான தேர்தல் வெற்றிகளைக் கவனிக்கும் போது புதுவையில் காங்கிரஸ் தேய்ந்துகொண்டே உள்ளது. பாஜக வளர்ச்சி அதிகரித்துள்ளது. 'குதிரை பேர' அரசியல் என்ற விமர்சனங்களைத் தாண்டி பாஜக வளர்ந்துள்ளது.

முதலில் அதிமுகவுடன் கூட்டணியுடன் தொடங்கிய ரங்கசாமி அரசியல் சூத்திர கணக்கு, அடுத்து பாஜகவுக்குத் துணை முதல்வர் என்ற நிலைக்குச் சென்று முதல்வர் நாற்காலியில் அசைக்கமுடியாதவராக உட்கார்ந்துவிட்டார். புதுவையின் நீண்ட கால முதல்வர் என்ற பெருமையைச் சம்பாதித்து, ஐந்தாவது முறையாக அந்தப் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார் ரங்கசாமி. அதாவது 16 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலி இவரது கட்டுப்பாட்டில் உள்ளது.

ரங்கசாமி ஆட்சி மீது சில விமர்சனங்கள் உள்ளன. அவர் 'ஒன் மேன் ஷோ' ஆக முடிவுகளை எடுக்கிறார். அமைச்சரவை முடிவை அவர் கலந்தாலோசிப்பதே இல்லை என்றும் சொல்லப்படுவது. மேலும் துணைநிலை ஆளுநருடனான மோதல் போக்கால் பல திட்டங்கள் செயல்படுவதில் காலதாமதம் நிலவுகிறது. அதைக் காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது.

கடந்த மாதம் கூட ரங்கசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது பற்றி பிரதமர் மோடியுடன் பேசி இருக்கிறேன் என்றார். அவர் ஆட்சியில் அதற்காகச் சிறு அசைவும் நடக்கவில்லை என்கிறார் காங் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம். இவர் தட்டாஞ்சாவடியில் வீடுவீடாகப் போய் மக்களைச் சந்தித்து மாற்றம் கோரி வாக்குக் கேட்டு வருகிறார்.

எனவே 9ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மிகச் சவாலானதாக உள்ளது. அதற்கு அகில இந்திய என். ஆர் காங்கிரஸ் பல வழிகளில் வியூகம் வகுத்து வருகிறது. ரங்கசாமிக்கு வயதாகிவிட்டது. அவருக்கு அரசியல் ஓய்வு தேவை என்றும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
திமுக, காங்கிரஸ் இடையான கூட்டணி வலுவாக இல்லை. அங்கே உள்கட்சி பூசல் மலிந்துள்ளது. அது ரங்கசாமிக்கு மேலும் சாதகமாக உள்ளது.

கடந்த 2001இல் தட்டாஞ்சாவடி, 2011இல் கதிர்காமம், 2021இல் யானம் ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் முதல்வர் ரங்கசாமி இருந்தார். மீண்டும் பழையபடி தட்டாஞ்சாவடிக்குத் திரும்பியுள்ளார். நெட்டப்பாக்கத்தை பிரதிநிதியான வைத்தியலிங்கம் இப்போது தட்டாஞ்சாவடியில் ரங்கசாமியுடன் மோதுகிறார். பொதுவாக இரண்டு தலைவருக்கான மோதலை தேர்தல் அரசியலில் பலரும் தவிர்ப்பர்.

இந்த இரண்டு பெருந்தலைகளால் பேசுபொருளாக மாறியுள்ளது தட்டாஞ்சாவடி. தக்கவைப்பாரா ரங்கசாமி என்பது மிகப்பெரிய கேள்வியாகியுள்ளது. ஐந்தாவது முறையாக 75 இளைஞர் மறுபடியும் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தால், மாநிலக் கட்சியான என்.ஆர் காங்கிரஸ் ஒரு தனித்த வரலாற்றைப் புதுவை வரலாற்றில் பதியவைக்கும்.

- கடற்கரய்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+