சீமான் வெட்டிடுவேன்,நாக்கை அறுத்துவிடுவேன்: பகீர் கிளப்பிய வடசென்னை காங். நிர்வாகி, போலீஸில் புகார்
சென்னை : காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமான் வெட்டிடுவேன், நாக்கை அறுத்து விடுவேன் என வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம் கடுமையாக எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் திரவியத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சீமான் உள்பட நாம் தமிழர் கட்சி முன்னணி நிர்வாகிகள் அண்மைக்காலமாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிள்ளைகள் என்று கூறி பேசியதுடன், காங்கிரஸ் கட்சியினரை சீண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால் கடும் கோபத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தில் சீமான் முன்னிலையில் பேசிய சாட்டை துரைமுருகன் , " நீங்கள் கருணாநிதி, அண்ணாதுரையிடம் படித்து வளர்ந்தவர், நாங்கள் தலைவர் பிரபாகரனை படித்து வளர்ந்த பிள்ளைகள். பெரியார், கருணாநிதி பிள்ளைகளுக்கு பேச தெரியும், எழுத தெரியும்.

என்ன பேசினார்
பிரபாகரன் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்று காங்கிரஸ்காரர்களுக்கு தெரியும். ராகுல் காந்திக்கு தெரியும். சோனியா காந்திக்கு தெரியும். உங்களுக்கு தெரியும்ல, உங்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஞாபகம் இருக்கும்ல, அவ்வளவு தான்" என்று ஆள் காட்டி விரலை நீண்டி எச்சரித்தபடி சாட்டை துரைமுருகன் பேசினார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

சாட்டை துரைமுருகன்
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை தலைமையில் தண்டையார்பேட்டை போஸ்ட் ஆபீஸ் அருகே நேற்று மௌன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ்காரர்களை ஆபாசமாக விமர்சிக்கும் சீமானை வெட்டி விடுவேன், நாக்கை அறுத்துவிடுவேன், தலையில்லா முண்டம் என வட சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம் கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் சாதி ரீதியாக சீமான் ஊருக்கு ஊர் ஒரு மாதிரி பேசுவதாகவும் திரவியம் கடுமையாக பேசினார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் நெருக்கடி
இதனிடையே சாட்டைதுரைமுருகன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். சீமானையும் கண்டிப்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனறு காங்கிரஸ் கட்சி, தனது கூட்டணி கட்சியான திமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video

பலத்த பாதுகாப்பு
இதனிடையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானைப் பற்றி அவதூறாக பேசிய வடசென்னை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் வடசென்னை தெற்கு மாவட்ட பொருளாளர் வெற்றி தமிழன் மற்றும் ஆர்கே நகர் தொகுதி செயலாளர் ஆனந்த் பாபு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியுள்ளனர். இதனிடையே சீமானை கடுமையாக பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரவியம் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications