சவுக்கு சங்கர் பேசியது தவறு.. கஞ்சா சங்கராக மாற்ற பார்க்கிறீர்களா? நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி!
சென்னை: காவலர்களை அவதூறாக பேசிய வழக்கிலும், கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் பேசியது தவறு எனவும்.. சாதாரண சவுக்கு சங்கரை கஞ்சா சங்கராக மாற்ற பார்க்கிறார்களா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல்துறையில் அமைச்சுப் பணியாளராக பணியாற்றி பின் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சங்கர், சவுக்கு என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார். மேலும் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் பல்வேறு இணையதளங்களுக்கும் யூட்யூப் சேனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அப்படி ஒரு சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி தான் தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
சவுக்கு சங்கர்: கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அவர் தேனி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து கோவை அழைத்து சென்றனர்.
வாகனம் விபத்து: காவல்துறை வாகனத்தில் சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்துச் சென்றபோது தாராபுரம் பகுதியில் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. வாகனத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்த நிலையில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து கோவை செல்லும் வழியில் மருத்துவமனை ஒன்றில் முதலுதவி அளிக்கப்பட்டு அதே வாகனத்தில் சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
கஞ்சா வழக்கு: முன்னதாக தேனியில் சவுக்கு சங்கருடன் இருந்த அவரது ஓட்டுனர் ராம் பிரசாத் மற்றும் நண்பர் ராஜரத்தினத்தை பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து சவுக்கு சங்கரின் காரில் சோதனை நடத்திய போலீசார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாகவும் பழனி செட்டிபட்டி காவல் துறையினர் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தனர்
சீமான்: இதனையடுத்து சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து அவர் தற்போது சிறையில் உள்ளார். இதனிடையே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் சவுக்கு சங்கர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது .
தவிர்த்திருக்கலாம்: அதற்கு பதில் அளித்த அவர் ,”காவல்துறை உயர் அதிகாரிகளையும் பெண் காவலர்களையும் இணைத்து சவுக்கு சங்கர் பேசியிருக்கக் கூடாது. அதை தவிர்த்து இருக்க வேண்டும். அதற்காக அவர் மீது கஞ்சா வழக்கு போடுவது சரியில்லை. எப்படி அவரிடம் கஞ்சா வந்தது? இத்தனை நாட்களில் அவரிடம் கஞ்சா இல்லையா? இப்போது மட்டும் திடீரென்று எங்கிருந்து அவருக்கு கஞ்சா வந்தது .. சவுக்கு சங்கர் என்பதை கஞ்சா சங்கர் என மாற்றுவதற்கான வேலையை நடத்தி வருகிறார்கள்.. சிறையில் வைத்து அவரை தாக்குவதாகவும் செய்திகள் வெளி வந்திருக்கின்றன.. இதெல்லாம் மிகவும் தவறானது’ என பேசி உள்ளார்












Click it and Unblock the Notifications