“தேர்தலில் தோற்றால் பால்டாயிலை குடிச்சிட்டு பாடையில் படுத்துடுங்க”.. நிர்வாகிகளை அலற விட்ட சீமான்!
சென்னை: "வரும் 2026 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட சீட் பெற்றவர்கள் வெற்றி பெற்ற பிறகே தொகுதியில் இருந்து வெளியே வர வேண்டும். தோற்றுவிட்டால் சிறிது பால்டாயிலை குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்து விடுங்கள். எப்படி இருந்தாலும் மாலை கன்ஃபார்ம்." எனப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக ஏற்கனவே உள்ள கூட்டணியை தொடர இருப்பதாகத் தெரிகிறது. கடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றி அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளன. விஜய் தலைமையிலான தவெக கூட்டணியை இன்னும் உறுதி செய்யவில்லை. நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.

சீமான் ஆலோசனை
இந்நிலையில் வரும் மே 18 ஆம் தேதி கோவையில் நடைபெறவிருக்கும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக் கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களுடன் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டியிடும். 234 வேட்பாளர்களில் 134 பேர் இளம் வேட்பாளர்கள். திமுக எனும் தீமையை, அதிமுக எனும் தீமையை வைத்து ஒழிக்க முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள்.
விஜய் கட்சியில் நானே சேர்த்துவிடுகிறேன்
நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியினர் விஜய் கட்சிக்கு சென்று விடுங்கள். நாம் தமிழர் கட்சியிலிருந்து சென்று கேட்டால் மு.க.ஸ்டாலின் உடனடியாக போட்டியிட சீட் கொடுத்து விடுவார். நாம் தமிழர் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தம்பி விஜய் கூட தேர்தலில் போட்டியிட சீட் கொடுப்பார். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் கூறுங்கள். நானே சேர்த்து விடுகிறேன். என் மீது நம்பிக்கை இருந்தால் என்னுடன் வரலாம். இல்லை என்றால் கிளம்பிச் செல்லலாம்.
பால்டாயிலை குடித்துவிட்டு
நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்தான் வேட்பாளர். வென்றால் மாலை, இல்லை என்றால் பாடை. சட்டமன்ற தேர்தலில் வெல்பவர்களை பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்பவர்களை பாடையில் ஏற்றி மாலை போட்டு அனுப்பி வைப்பேன். எப்படி இருந்தாலும் மாலை கன்ஃபார்ம். தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட சீட் பெற்றவர்கள் வெற்றி பெற்ற பிறகே தொகுதியில் இருந்து வெளியே வர வேண்டும். தோற்றுவிட்டால் சிறிது பால்டாயிலை குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்து விடுங்கள்.
நாம் தமிழர் கட்சி பேனரில் தொண்டர்கள், நிர்வாகிகள் நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும். பேனரில் தறுதலைகள் போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்துகொண்டு ஃபோட்டோ வைக்கக்கூடாது" எனக் காட்டமாகப் பேசியுள்ளார். சீமான் சூடாகப் பேசியதைக் கேட்டு கட்சி நிர்வாகிகள் வெலவெலத்துப் போயுள்ளனராம்.












Click it and Unblock the Notifications