சென்னையில் நாளை.. நாம் தமிழர் கட்சி பிரமாண்ட சைக்கிள் பேரணி.. சிவசங்கரி பங்கேற்பு
சென்னை: சென்னையில், மார்ச் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, நாம் தமிழர் கட்சி சைக்கிள் பேரணி நடத்தி மக்களிடம் ஆதரவு கேட்க உள்ளது.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்பதும், அதன் வேட்பாளர்களில், சரிபாதி தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவதும் தாங்கள் அறிந்ததே.

அதில் ஒரு சிறப்பம்சமாக, தியாகராய நகர் தொகுதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் சகோதரி சிவசங்கரி போட்டியிடுகிறார். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறையின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

சகோதரி சிவசங்கரியை ஆதரித்தும், தமிழகம் முழுவதும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து வருகிற மார்ச் 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பாசறையானது, மாபெரும் மிதிவண்டிப் பரப்புரைப் பேரணியை நடத்த உள்ளது.

மிதிவண்டிப் பரப்புரைப் பேரணியானது, அன்றைய தினம் காலை 6.30 மணி அளவில் ஆரம்பித்து, சௌந்தர பாண்டியனார் அங்காடி, எம்ஜிஆர் நினைவு இல்லம், நடேசன் பூங்கா, துரைசாமி சுரங்கப்பாதை, மேற்கு மாம்பலம், அசோக்நகர் , வடபழனி, கோடம்பாக்கம் வழியாக மீண்டும் பனகல் பூங்காவினை காலை 8.30 மணி அளவில் சென்றடைந்து நிறைவடைகிறது. இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications