நடிகர் விஜய் எதுக்கு பெரியார் திடல் போனாரு தெரியுமா?கண்டுபிடித்த சீமான் கட்சி இடும்பாவனம் கார்த்திக்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தந்தை பெரியார் பிறந்த நாளில் பெரியார் திடலுக்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்ததன் பின்னணி குறித்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் சுவாரசிய தகவலைப் பகிர்ந்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் பெரியார் ஒரு அறிவிக்கப்படாத மதமாக உருவாக்கப்படுவதாகவும் இடும்பாவனம் கார்த்திக் விமர்சித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 146-வது பிறந்த நாளான செப்டம்பர் 17-ந் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் தமது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பகிர்ந்திருந்தார். அத்துடன் திடீரென சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் முதல் முறையாக தலைவர் ஒருவரது சிலைக்கு மாலை அணிவித்தது தந்தை பெரியாருக்குதான். இதனால் நடிகர் விஜய்யை பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தொடர்பாக நீண்ட சொற்பொழிவையே கடும் கோபத்துடன் நிகழ்த்தினார்.
இதேபோல டிவி விவாதம் ஒன்றில் நடிகர் விஜய், பெரியார் திடலுக்கு சென்றது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் கூறிய சுவாரசிய தகவல்கள்: விஜய் மாலை அணிவித்திருப்பதாலேயே பெரியார் கோட்பாடுகளை நடிகர் விஜய் பின்பற்றுகிறார் என சொல்ல முடியாது. ஏனெனில் பெரியார் சிலைக்கு தமிழ்நாட்டில் மாலை போடாத தலைவர்களே இல்லை. ஏன் தேசியம், திராவிடத்தை ஒன்றாக கட்சிப் பெயரில் வைத்த விஜயகாந்தும் மாலை போட்டார்தானே. பெரியார் சமூக நீதிக்காக போராடியவர் என பாஜக தலைவராக இருந்த போது எல்.முருகனும் கூறினார்.
இந்துவாகவே சாகமாட்டேன் என்ற அம்பேத்கரை இப்போது சங் பரிவார இயக்கங்கள் கொண்டாடுகின்றன. காமராஜரை உயிரோடு கொளுத்தப் பார்த்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக இன்று காமராஜரை கொண்டாடுகின்றன. ஆகையால் இவை எல்லாம் ஒரு அடையாள அரசியல்.. பிம்ப அரசியல் அவ்வளவுதான்.
நாம் தமிழர் கட்சி பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறது. மொழி, இன தொடர்பான பெரியாரின் வரையறைகளில் முரண்படுகிறது. ஆதி முதல் அந்தம் வரை பெரியாருக்குள் அடக்கம்.. எல்லாமே பெரியாரில் இருந்துதான் தொடக்கம் என்பதை நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை.
தமிழ்நாட்டில் திமுகவை யார் விமர்சித்தாலும் சங்கி முத்திரை குத்துகின்றனர். நடிகர் விஜய் மீதும் சங்கி முத்திரை குத்தப்படுகிறது. இந்த சங்கி முத்திரையை தவிர்க்கத்தான் விஜய் பெரியார் திடலுக்குப் போனார். பா.ரஞ்சித்தை திராவிட கூட்டம் சங்கி என்றுதானே விமர்சித்தது. சங்கி என்ற விமர்சனத்துக்கு பதில் தரவே விஜய், பெரியார் திடலுக்கு சென்றார். இவ்வாறு இடும்பாவனம் கார்த்திக் கூறினார்.












Click it and Unblock the Notifications