என்னிடம் பிரபாகரன் சொன்ன உலக அமைதிக்கான நோபல் பரிசு விவகாரம்- கொந்தளிப்புக்கு நடுவே சீமான் சொன்னது!
சென்னை: ராஜீவ்காந்தியை விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள் என நான் பேசவில்லை. ராஜீவ் காந்தியை தமிழர்கள்தான் கொன்றார்கள் என்கிற வரலாற்று பதிவு வரும் என்றுதான் பேசினேன்; தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அத்தனை கோஷ்டியையும் ஒன்றாக இணைத்திருப்பதால் எனக்குதான் அந்த கட்சியினர் நன்றி சொல்ல வேண்டும் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு. இதனை எப்போது செய்திருக்க வேண்டும்? இதனை முன்னரே செய்திருக்கக் கூடாதா?இப்போது மத்திய அரசால் விலையை குறைக்க முடியும் என்கிற போது ஏன் இத்தனை நாட்களாக இதனை செய்யவில்லை? அதாவது ரூ50 விலை ஏற்றிவிட்டு ரூ10 குறைப்பது என்பது எப்படி சரியாக இருக்க முடியும்? மத்திய அரசு விலையை குறைத்துள்ளது எனில் மாநில அரசும் கலால் வரியை இயல்பாகவே குறைக்க வேண்டும். இதை நாம் வலியுறுத்த வேண்டியதில்லை.. முதல்வரே இதை செய்வார் என எதிர்பார்க்கிறோம்.
நெஞ்சுக்கு நீதி படம்
உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தை இந்தியில் எடுத்தால் பிரமாதமாக இருக்கும் என்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. அந்த படமே ஆர்ட்டிக்கிள் 15 என்ற இந்தி படத்தில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என்பது அமைச்சர் நேருவுக்கு தெரியவில்லை. அமைச்சர்கள் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்கின்றனர்; படம் பார்த்துவிட்டு வந்தால் பிரியாணி தருகின்றனர். ஆனாலும் கூட்டம் வரவில்லை என்கின்றனர். திமுக எம்பி ஒருவர் பெரியாரை நான் பார்த்தது இல்லை; உதயநிதியை நெஞ்சுக்கு நீதி படத்தில் காக்கி உடையில் பெரியாராக பார்க்கிறேன் என்கிறார். இது என்ன பெரியாருக்கு வந்த சோதனை!
சட்டம் ஒழுங்கு எப்படி?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது நாள்தோறும் ஒருவர் நடுசாலையில் வெட்டிக் கொல்லப்படும் அளவுக்கு 'சிறப்பாக' இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம். இங்கே மதச்சண்டைகள் இல்லை என்கிறார் முதல்வர். ஆனால் நடக்கிறது. இங்கே வன்புணர்வு இல்லை என்கிறார்.. ஆனால் வன்புணர்வு வழக்கு பதிவாகிறதே..
நோபல் பரிசும் பிரபாகரனும்
காங்கிரஸ் கட்சி ராஜீவ் காந்திக்கு புனிதர் பட்டம் கட்டுவதை முதலில் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் அரசியல் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு எதற்கு தேவை? என்ன காங்கிரஸ் கட்சி சுதந்திரம் வாங்கி கொடுத்தது? இங்கே பேசுவதற்கே உரிமை இல்லை.. யாருக்கு சுதந்திரம் வாங்கி தந்தது காங்கிரஸ்? பிரபாகரன் என்னிடம் பேசும் போது, தம்பி எனக்குதானே உலக அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்றார். அத்துடன், இந்தியா-சீனா, பாகிஸ்தான் என அனைத்து எதிர் எதிர் நாடுகளும் எனக்கு எதிராக ஒன்றாக நிற்கிறது.. அப்ப உலக நாடுகளை எல்லாம் ஒன்றாக்கியது நான் தானே... எனக்குதான் கொடுக்க வேண்டும் என்று நகைச்சுவையாக என்னிடம் கூறினார். அதேபோல்தான் காங்கிரஸ் கட்சிக்குள் குறைந்தது 10 கோஷ்டிகளாக இருக்கும். இப்போது அந்த 10 கோஷ்டிகளையும் நான் ஒன்றாக்கி இருக்கிறேன். அதற்காக காங்கிரஸ் எனக்கு நன்றி செலுத்த வேண்டும்.
இனப்படுகொலையும் காங்கிரஸும்
ராஜீவ்காந்தியை விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள் என நான் பேசவில்லை. ராஜீவ் காந்தியை தமிழர்கள்தான் கொன்றார்கள் என்கிற வரலாற்று பதிவு வரும் என்றுதான் பேசினேன். சந்தனக் கடத்தல் வீரப்பனை திருடன் என்கிறீர்கள்.. அப்படியானல் வீரப்பனிடம் இருந்து வாங்கி விற்றவர்கள் எங்கே? அதேபோல் தமிழர்களுக்கு வீரமான குறியீடு வருவதை சிதைக்கத்தான் ராஜீவை கொன்றுவிட்டனர் கொன்றுவிட்டனர் என்கின்றனர். ராஜீவ் காந்தியால் 25,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே அதைப் பற்றியும் பேசுங்கள். ராஜீவ் என்கிற ஒருவரது மரணத்துக்காக ஒட்டுமொத்த இனத்தை கொன்று குவித்தது காங்கிரஸ் தானே.. இந்தியாவின் துணையோடுதான் இறுதிப் போர் நடத்தியதாக சிங்கள அரசு சொல்கிறதே.. கோத்தபாய சொல்கிறாரே..
புலிகள் மீது தடை ஏன்?
ராஜீவ் காந்தியை படுகொலை செய்தோம் என்று பிரபாகரனா சொன்னார்? அப்படி இருக்கும் போது விடுதலைப் புலிகளை ஏன் பயங்கரவாத இயக்கம் என தடை செய்தீர்கள்? நாங்கள் கொல்லவில்லை என்றால் கொன்றுவிட்டோம் என்கிறீர்கள்.. கொன்றுவிட்டோம் என்றால் இப்படி பேசுகிறார் என்கிறீர்கள்.. எங்களை எப்படித்தான் பேச சொல்கிறீர்கள்? பேரறிவாளன் விடுதலையானதை நாங்கள் என்ன கெடா வெட்டியாக கொண்டாடுகிறோம்? ரிக்கார்ட் டான்ஸ் வைத்தா கொண்டாடுகிறோம்? லட்சக்கணக்கில் ஈழத் தமிழர் சாகும் போது நீங்கள்தானே கொண்டாடி மகிழ்ந்தவர்கள். இவ்வாறு சீமான் கூறினார்.