டேய் பரமா படிடா.. சீமானுக்கு இருந்தது 8 ஓட்டு.. அதுலயும் பாதி போச்சா? அண்ணனுக்கு ஆப்படித்த தம்பிகள்!
சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதை விடுத்து விஜய் எத்தனை சதவீத வாக்குகளை அள்ள போகிறார்? நாம் தமிழர் எட்டு சதவீத வாக்குகளை தக்க வைக்குமா? என பல விவாதங்கள் இருக்கிறது. இந்த நிலையில் தான் சீமானுக்கு தெரியாமலேயே ஒரு பெரிய சிக்கல் நடந்திருக்கிறது.
நாம் தமிழர் கட்சிக்கு சீமானின் உருவத்தை போல் இருக்கும் ஏர் கலப்பை விவசாயி சின்னம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சில நாம் தமிழர் தம்பிகள் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்களித்துள்ளனர். அதைவிட கொடுமை என்னவென்றால் அதனை புகைப்படமாக எடுத்து வெளியேயும் கசிய விட்டிருப்பது தான்.
பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் தமிழக சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. விஜய் வருகையால் தான் இவ்வளவு வாக்கு விழுந்திருக்கிறது என தமிழக வெற்றிக்கழகத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் 2026
ஆட்சிக்கு ஆதரவு இருப்பதால்தான் பெருவாரியான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என திமுகவும், ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள் என அதிமுகவும் சொல்லி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் இந்த தேர்தலில் போட்டி இருந்தது. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் சீமான் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
சீமான்
கடந்த பல தேர்தல்களை தனித்தே சந்தித்த சீமான் இந்த முறையும் தனித்து தான் போட்டி என அறிவித்தார். 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என பல நாட்களுக்கு முன்பே அறிவித்ததோடு எல்லா கட்சிக்கும் முன்னதாக வேட்பாளர்களையும் அறிவித்தார். இந்த முறை மாநில கட்சி என்று அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தோடு போட்டியிட்டது. ஏற்கனவே மைக் உள்ளிட்ட பல சின்னங்களை பெற்ற சீமான் அதற்கு முன்னதாக கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்கு கேட்டு இருந்தார்.
விவசாயி சின்னம் குழப்பம்
இந்த நிலையில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தலில் எட்டு சதவீத வாக்குகளை பெற்றதால் அவர் நிரந்தர சின்னத்தை பெற்றார். சீமானின் முக வடிவமைப்பில் இருப்பது போல ஒரு விவசாயி ஏர் கலப்பையோடு இருப்பது போல சின்னத்தை வரைந்து கொடுத்து அங்கீகாரத்தை பெற்றது நாம் தமிழர் கட்சி. இதை அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறலாம் என சீமான் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் ஒரு சிக்கல் எழுந்தது.
கரும்பு விவசாயி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி வாய்ப்புகள் குறித்து பேசினார். தங்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாததால் தனித்து களமிறங்குவோம் என அறிவித்திருந்தார். 51 தொகுதிகளில் தனது கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவோம் எனவும் அறிவித்தார். சொன்னது போலவே சில தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தில் பலர் போட்டியிட்டனர்.
ஏர்கலப்பை விவசாயி
அதில் தான் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் சிக்கல் காத்திருந்தது நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக பார்க்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் அந்த கட்சியின் அடையாளமாகவே மாறிப்போனது. இந்த நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் ஏர்கலப்பையோடு இருக்கும் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது நாம் தமிழர் கட்சி. சில தொகுதிகளில் இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. அந்த சின்ன சில பகுதிகளை நாம் தமிழர் கட்சியின் சின்னத்திற்கு அருகே இருந்தது. ஒரே மாதிரியான சின்னம் வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும் என்ற கருத்து நாம் தமிழர் கட்சி இடையே இருந்தது.
தமிழக வெற்றிக் கழகம்
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியான இளைஞர்கள் வாக்கு நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் வரவால் பாதிக்கப்படும் சூழல் இருந்தது. இதனிடையே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் ஏர் கலப்பை விவசாயி சின்னத்துக்கும் ராம்தாஸ் அத்வலையின் கரும்பு விவசாயி சின்னத்திற்கும் பெரிய இடைவெளி இல்லை. சொல்லப்போனால் ஒரு சில தொகுதிகளில் அருகருகே இருந்தது. இந்த நிலையில் தான் ஆர்வக்கோளாறில் சில நாம் தமிழர் தம்பிகள், கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு அதனை பெருமையோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.
நாம் தமிழர் தம்பிகள்
இந்த தேர்தலில் வீடியோ எடுப்பதற்கும் அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்கும் தடை விதித்திருந்தது தேர்தல் ஆணையம். அதையும் மீறி ஆர்வக்கோளாறில் செல்போனை உள்ளே எடுத்துச் சென்று விவசாய சின்னத்துக்கு வாக்களித்தோம் என பெருமையுடன் சொன்ன சில நாம் தமிழர் தம்பிகள் தாங்கள் ஏர் கலப்பை விவசாயி சின்னத்துக்கு பதிலாக கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்களித்தது கூட தெரியாமல் சமூக வலைதளங்களில் பெருமை பிதற்றி வருகின்றனர். தங்களை தற்குறி என சொல்லிவிட்டு நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? என ஒரு கட்சியினர் நாம் தமிழர் தம்பிகளை வறுத்தெடுத்து வருகின்றனர்.














Click it and Unblock the Notifications