"புதுசா கட்சி ஆரம்பிச்சிட்டு இப்படி பேசுனா அது விந்தையிலும் விந்தை”: விஜய் பேச்சுக்கு நயினார் ரிப்ளை
சென்னை: திமுக - தவெக இடையே தான் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, "தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. இந்த மாதிரி சூழ்நிலையில் புதியதாக கட்சி ஆரம்பித்து எங்களுக்குள் தான் போட்டி என்றால் அது விந்தையிலும் விந்தை." என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தக் கோரச் சம்பவத்திற்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாத காலம் விஜய் கட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை.

இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கடந்த வாரம் தமது பனையூர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து விஜய் பேசினார். மேலும் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிபிஐ அதிகாரிகள் பனையூரில் உள்ள தவெக கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. பொதுக்குழுவில் பேசிய தவெக தலைவர் விஜய், "2026-ல் ரெண்டே பேருக்கு இடையில்தான் போட்டி. இந்த போட்டி இன்னும் ஸ்ட்ராங்காக மாறப்போகிறது. 100 சதவீதம் வெற்றி நமக்கே" என்று மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், 2026-ல் தவெக தலைவர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "நாளை கூட கட்சி ஆரம்பித்து நான் தான் முதல்வர் என ஜனநாயக நாட்டில் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. அதில் தவறில்லை" என்றார்.
மேலும், திமுக - தவெக இடையே தான் போட்டி என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, "தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. இந்த மாதிரி சூழ்நிலையில் புதியதாக கட்சி ஆரம்பித்து எங்களுக்குள் தான் போட்டி என்றால் அது விந்தையிலும் விந்தை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications