தமிழக பாஜக புதிய தலைவரானார் நயினார் நாகேந்திரன்!
சென்னை: தமிழக பாஜக புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட விழாவில் அவர் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கையில் டெல்லி பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் இன்றைய தினம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடைபெற்றது.

இதற்கான விருப்பமனுக்களை நேற்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் 10 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினராக இருந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
இதனால் 8 ஆண்டுகளாக பாஜகவில் இருக்கும் நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்வாரா என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி தலைமையிடம் சிறப்பு அனுமதி பெற்று அவர் தாக்கல் செய்தார்.
பாஜக அலுவலகத்தில் நடந்த விருப்பமனு பெறும் நிகழ்வில் அவர் தாக்கல் செய்த போது வானதி, எச்.ராஜா, முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன், கேபி ராமலிங்கம், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பரிந்துரை செய்தனர்.
அதை பாஜக தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் பெற்றுக் கொண்டார். நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளதால் எனவே அவர் 13 ஆவது மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக பாஜகவின் சட்டவிதிகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபுதி பேலஸில் நிகழ்ச்சியில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜகவில் முதல் முறையாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மாநில தலைவராக நியமிக்கப்படுகிறார்.












Click it and Unblock the Notifications