கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த நளினியின் தாய்.. 30 நாள் பரோலை நீட்டித்த தமிழக அரசு.. அதிரடி உத்தரவு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பரோலில் வெளி வந்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் போன்றோர் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர்.
இவர்களில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, தற்போது 7 பேரும் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளனர்.
கடைசி காலத்தில் மகளுடன் வாழ ஏங்குகிறேன்...முதல்வர் மனது வைக்கவேண்டும் - நளினி தாயார் உருக்கம்
நளினி முருகன்
ஆயுள் தண்டனை என்பது 14 வருடங்கள்தான், இவர்கள் கடந்த 30 வருடங்களாக சிறையில் உள்ளார்கள். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் வலுத்துவருகின்றன. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. மேலும் மத்திய அரசும் இவ்விவகாரத்தில் உரிய முடிவெடுக்கவில்லை
பரோல் உத்தரவு
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில், கைதி நளினி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது தாய் பத்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ளும் வகையில் நளினிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
காவல்நிலையத்தில் கையெழுத்து
பரோலில் வெளியே வந்த நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று கையெழுத்திட்டு வருகிறார். மேலும் அவர் தங்கியுள்ள வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பரோல் நீட்டிப்பு
இந்நிலையில் 30 நாள் பரோல் நீட்டிக்கக் கோரி நனிளியின் தாயார் பத்மா தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து நளினிக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே ஓராண்டுக்கு முன்பு நளினி சிறையில் இருந்து ஒருமாதம் பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கணவர் முருகனுக்கு அப்போதும் பரோல் மறுக்கப்பட்டது.