விருது தொகை ரூ10 லட்சத்துடன் ரூ5,000 சேர்த்து தமிழக அரசிடமே வழங்கினார் தகைசால் தமிழர் நல்லகண்ணு!
சென்னை: தமக்கு விருதுடன் வழங்கப்பட்ட ரூ10 லட்சத்துடன் ரூ5,000 சேர்த்து தமிழக அரசின் நிவாரண நிதிக்கே வழங்கினார் தகைசால் தமிழர் விருது பெற்ற முதுபெரும் அரசியல் தலைவர் இரா.நல்லகண்ணு.
Recommended Video
தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் தகைசால் தமிழர் விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு முதுபெரும் இடதுசாரித் தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
2022-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது, முதுபெரும் அரசியல் தலைவரான விடுதலைப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணுவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. "இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, விடுதலைப் போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும், கழித்தவரும், ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்தினையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டுவருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு 2022-ம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. "தகைசால் தமிழர்" விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.நல்லகண்ணுவிற்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்" என தமிழக அரசு அறிவித்திருந்தது.
சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்ற நாட்டின் 76-வது சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி அரசின் விருதுகளை வழங்கினார். 2022-ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இரா.நல்லகண்ணுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமக்கு வழங்கப்பட்ட விருது தொகையான ரூ10 லட்சத்துடன் ரூ5,000 சேர்த்து மொத்தம் ரு10,05,000 தொகையை தமிழக அரசி நிவாரண நிதிக்கே பெருமிதத்துடன் வழங்கினார் இரா.நல்லகண்ணு.
இதேபோல் நல்லகண்ணுவின் 60 ஆண்டுகால கம்யூனிச இயக்கப் பணிகளைப் பாராட்டி அவருக்கு ரூ1 கோடி வசூலித்து வழங்கப்பட்டது. ஆனால் அந்த தொகையை தாம் வைத்துக் கொள்ளாமல் கட்சிக்கே திருப்பி வழங்கியவர் இரா.நல்லகண்ணு என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு துறைகளில் சிறப்பான செயல்பாடு.. விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்