Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nallakannu: “நவீன கக்கன்” எதிரிகளே இல்லாத தலைவர்.. அப்பழுக்கற்ற அரசியல்வாதி.. யார் இந்த நல்லகண்ணு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (Nallakannu) வயோதிகம் காரணமாக இன்று மதியம் உயிரிழந்தார். தோழர் நல்லகண்ணு என்று பலராலும் அழைக்கப்பட்ட அவர் நவீன கக்கன் எனவும், எதிரிகளே இல்லாத தலைவர் எனவும் போற்றப்படுகிறார். அப்பழுக்கற அரசியல்வாதியான நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தியிருந்தது. தனது 101 வயதில் மறைந்துள்ள நல்லகண்ணுவின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

கடந்த 1 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணு தொடர்ந்து 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மதியம் உயிர் பிரிந்தது.

Nallakannu passed away

மூச்சுத் திணறல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101). வயதுமூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தீடிரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார். இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் (ஜனவரி) 8 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுக்கு மீண்டும் கடந்த 1 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

நல்லகண்ணு மறைவு

பின்னர் உடனடியாக அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 25 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் 1.55 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர் நல்லகண்ணு. நாட்டின் முன்னோடி அரசியல் தலைவரும், தலைசிறந்த பொதுவுடைமையாளரும் கூட.. தகைசால் தமிழர் விருது வழங்கி நல்லகண்ணுவை தமிழக அரசு பெருமைப்படுத்தியது. தனது 101 வயதில் மறைந்துள்ள நல்லகண்ணுவின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர்

விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவராக 25 ஆண்டுகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக 13 ஆண்டுகளும், மத்திய கமிட்டி உறுப்பினராகவும் தேசிய கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள ஆர் நல்லகண்ணு கடந்த 1925 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தார்.

ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிக் காலத்திலேயே ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இளம் வயதிலேயே சேர்ந்த நல்லக்கண்ணு இந்திய விடுதலை போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் கடந்த 1943 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து நல்லக்கண்ணு தோழர் நல்லக்கண்ணுவாக மாறினார்.

ஆயிரம் நெல் மூட்டைகள்

அன்று தொடங்கிய ஒடுக்கப்பட்ட, ஏழை, தொழிலாளர், உழைக்கும் வர்க்க, விளிம்பு நிலை மக்களுக்கான நல்லக்கண்ணுவின் போராட்டம் இறப்பு வரை தொடர்ந்தது. இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த சமயத்தில் நல்லகண்ணு பத்திரிகை ஆசிரியராக இருந்தார். இதில், பத்தினிக் கோட்டம் என்ற இடத்தில் உணவை பதுக்கி வைத்திருப்பதை அறிந்த நல்லக்கண்ணு, "ஜனசக்தி" என்ற பத்திரிகையில் அதுகுறித்து எழுதினார்.

மேலும் அரசு அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதனால் ஆயிரம் நெல் மூட்டைகளை வெளியில் கொண்டு வந்தார். இது பஞ்சத்தால் பசியில் வாடிய மக்களின் பசியை தீர்க்க உதவியது. இதனாலேயே அந்த சுற்றுவட்டார மக்கள் நல்லகண்ணுவை இப்போது வரையிலும் மறக்காமல் பேசி வருகிறார்கள். தொடர்ந்து தன்னை முழு நேர மக்கள் பணியாளராக அர்ப்பணித்துக் கொண்ட நல்லக்கண்ணு சுதந்திரம் கிடைத்த பிறகு கம்யூனிஸ்டுகள் மீது இந்திய அரசு தொடுத்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடினார்.

சமூக நீதிக்காக குரல்

இதில் ஆயுதப் புரட்சியை தூண்டியதாக, அரசுகளை கவிழ்க்க முயன்றதாக கூறி நெல்லையில் சதி வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த 1952 ஆம் ஆண்டு இவ்வழக்கில் நல்லக்கண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வெறும் 27 வயதே ஆகியிருந்தது. தொழிலாளர் போராட்டங்கள் மட்டுமின்றி பட்டியலின, சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராகவும், சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் நல்லக்கண்ணு. நெல்லை தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளை கும்பலுக்கு எதிராக போராடினார். நீதிமன்றத்தில் இதற்காக தானே வாதாடி சட்டப்போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டார். இதனால் தாமிரபரணியில் மணல் அள்ளுவது உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.

எம்.எல்.ஏ, எம்பி ஆனதே இல்லை

உண்மையான மக்கள் போராளிகளுக்கு வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதற்கு நல்லக்கண்ணு ஓர் உதாரணமாகவே வாழ்ந்தார். சுமார் 80 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் நல்லக்கண்ணு இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்தது கிடையாது.

அரசியலில் இருக்கும் பலரும் சொந்த வீடு, கார், பங்களா என ஆடம்பரமாக இருந்து வரும் நிலையில் தற்போது கூட சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்தார். எளிமையின் சிகரமான இவர், பெரிய போராட்டம், சிறிய போராட்டம் என்று பார்க்காமல் போராட்டத்தின் நோக்கத்தை மட்டுமே அறிந்து அதில் கலந்துகொள்வார்.

பணத்தை விரும்பாதவர் மக்கள், கட்சி, அரசியல் என்றே தனது வாழ்நாளை கழித்த ஒப்பில்லா தலைவர். நவீன கக்கன் என அழைக்கப்படுகிறார். அப்பழுக்கற்ற அரசியல்வாதியான நல்லகண்ணுவிற்கு தமிழக அரசு தகைசால் தமிழர் விருது வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+