“தமிழகத்திற்காக..” வைகோ சொன்ன வார்த்தை.. நல்லகண்ணு போட்ட முதல் கையெழுத்து! ஆளுநருக்கு எதிராக சம்பவம்
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆளுநரை பதவியிலிருந்து விலக்கக்கோரி மதிமுக இன்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தொடங்கி வைத்திருக்கிறார்.
ஆளுநர் ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. சனாதனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, திராவிட மாடல் தொடர்பாக கேள்வியெழுப்புவது, திருக்குறளின் ஜி.யு.போப் மொழிபெயர்ப்பை விமர்சித்திருந்தது, தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை, கார்ல் மார்க்ஸ் மீதான விமர்சனம், மசோதாக்களை திருப்பி அனுப்பியது, சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் என ஆளுநர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

எனவே ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று தோழமை கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 29வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளராக 5-வது முறையாக வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியிலிருந்து விலக்கக்கோரி மாநிலம் முழுவதும் கையெழுத்து நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த கையெழுத்து இயக்கம் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று தொடங்கியது. இந்த கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய நல்லகண்ணு, "தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்க மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் துவக்கி உள்ளனர்.
இந்த கோரிக்கை தீர்மானமான கோரிக்கையாக உள்ளது, இது அவசியமானதும் கூட. ஜாதி , மதம் என்று இல்லாமல் மதச்சார்பற்ற முறையில் இருக்க வேண்டும் என்பதை மாற்றும் வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கிறது. அரசியல் சாசனத்திற்கு எதிராக அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தையும், மதச்சார்பற்ற கொள்கையையும் ரவி புறந்தள்ளியுள்ளார். எனவே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இதற்காக முதல் கையெழுத்தை நான் போட்டிருக்கிறேன். இது பல கோடி மக்களின் கையெழுத்தை பெற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பேசிய வைகோ, "தமிழ்நாட்டு ஆளுநர்கள் யாரும் செய்யாத வகையில் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய குடியரசு தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். முதலமைச்சரின் செயலை விமர்சிப்பதற்கு இவர் என்ன எதிர்க்கட்சித் தலைவரா? ஆளுநர் பதவியை விட்டு விட்டு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். இந்த கையெழுத்து இயக்கம் அரசியல் காரணத்திற்காக அல்ல, தமிழ்நாட்டின் நன்மைக்காக" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications