'நம்ம சென்னை'.. மெரினா கடற்கரை செல்பி பாயிண்ட் திடீர் இடமாற்றம்! எங்கு வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு இருந்த ‛நம்ம சென்னை' செல்பி பாயிண்ட் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் அடையாளமாக மெரினா கடற்கரை உள்ளது. தினமும் பல ஆயிரம் மக்கள் மெரினா கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். மேலும் சென்னை வரும் சுற்றுலா பயணிகளும் மெரினா கடற்கரைக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனால் மெரினா கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மெரினா கடற்கரைக்கு வருவோர் ‛செல்பி' எடுக்க வசதியாக ‛செல்பி பாயிண்ட்' அமைக்கப்பட்டது.

‛நம்ம சென்னை' என தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரமாண்டமாக ‛செல்பி பாயிண்ட்' அமைக்கப்பட்டது. இதில் ‛நம்ம' எனும் சொல் சிவப்பு நிறத்தில் தமிழ் மொழியிலும், ‛சென்னை' எனும் சொல் வெள்ளை நிறத்தில் ஆங்கில மொழியிலும் வடிவமைக்கப்பட்டு பிரமாண்டமாக காமராஜர் சாலையில் ராணி மேரி கல்லூரிக்கு எதிரே அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த ‛நம்ம சென்னை' செல்பி பாயிண்ட் என்பது 10 அடி உயரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அதோடு மெரினா கடற்கரைக்கு வரும் மக்கள் அனைவரும் ஆர்வமாக ‛நம்ம சென்னை' செல்பி பாயிண்ட் முன்பு நின்று ‛செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
இத்தகைய சூழலில் மெரினா கடற்கரையில் இருந்த ‛நம்ம சென்னை' செல்பி பாயிண்ட் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மெரினா கடற்கரையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள பாரத சாரண சாரணியர் அலுவலகம் எதிரே ‛நம்ம சென்னை' செல்பி பாயிண்ட் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்தும் வகையில் 2 ம் கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த பணியின் காரணமாக ‛நம்ம சென்னை' செல்பி பாயிண்ட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் என்பது ரூ.63 ஆயிரத்து 245 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மொத்தம் 118.9 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னை மாதவரம்-சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications