ரஜினிகாந்த் தொகுதிக்கு 500 ஓட்டுகள் வாங்குவார்.. தமிழகத்திற்கு என்ன செய்துள்ளார்..? -நாஞ்சில் சம்பத்
சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் தொகுதிக்கு 500 ஓட்டுக்கள் தான் வாங்குவார் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் சரி அரசியலுக்கு வந்தாலும் சரி அதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அவர் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகளில் ரஜினிகாந்த் என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வியையும் நாஞ்சில் சம்பத் முன் வைத்துள்ளார்.
நீதித்துறை குறித்த விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்கவே முடியாது: பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்
நாஞ்சில் சம்பத்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் எழுச்சி ஏற்படும் என்பதெல்லாம் மாயை என்றும் இதனால் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். ரஜினிகாந்தின் எந்தப் படம் முழுமையாக ஓடியிருக்கிறது என வினவிய அவர், தாம் தமிழ்நாடு முழுவதும் சுற்றியவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன் ரஜினி வந்தால் திமுகவுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படாது எனத் தெரிவித்திருக்கிறார்.
500 ஓட்டுக்கள்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என அவரை நம்பியிருந்தவர்களுக்கே இன்று 50 வயதை கடந்துவிட்டது எனக் கூறிய நாஞ்சில் சம்பத், ரஜினி கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் தொகுதிக்கு 500 ஓட்டுக்கள் தான் வாங்குவார் எனக் கூறியிருக்கிறார். இது தான் யதார்த்த நிலை என்றும் இது புரியாமல் அவரை வைத்து மாயையை உருவாக்கி வருவதாகவும் விமர்சித்திருக்கிறார். பத்திரிகையாளர் செந்தில் நடத்திய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வருத்தப்படுகிறார்
கமல்ஹாசனை பொறுத்தவரை கட்சி தொடங்கிவிட்டோமே என்ற கட்டாயத்திலும் வருத்தத்திலும் கட்சி நடத்தி வருவதாகவும், தன்னால் எந்த தாக்கத்தையும் உருவாக்க முடியாது என்பது அவருக்கே தெரியும் எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ரஜினி, கமல் ஆகியோரால் தமிழக அரசியல் களத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக-அமமுக
அதிமுக- அமமுக இணைவதற்கு வாய்ப்பில்லை என்றும் சசிகலாவை பொறுத்தவரை தனக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் தோளில் சுமந்து பயணிக்க விரும்பமாட்டார் என்பதே தனது கணிப்பு எனவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார். அதிமுக சிதறிய நிலையில் உள்ளதாகவும் தேர்தல் நெருக்கத்தில் இன்னும் பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்திருக்கிறார்.