பாஜகவின் வக்கிர அரசியல்.. விஜய் நிகழ்த்த போகும் அதிசயம்.. நாஞ்சில் சம்பத் அப்டேட்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டது. தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி சேரவில்லை. சிபிஐ வழக்கு, மனைவியுடன் பிரச்சனை, ஜனநாயகன் படம் தடை என விஜய் அடுத்தடுத்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் பாஜக வக்கிரமான அரசியலில் ஈடுபடுவதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டு அரசியல் ஒரு கொதி நிலைக்கு வந்திருக்கிறது. தமிழ்நாடு தட்பவெப்ப நிலை இன்றைக்கு தவெகவுக்கு சாதகமாக உள்ளது. 1,000 பிறை கண்ட திமுக, ஒரு முக்கால் நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர்.

திமுக மாநாடு மீது விமர்சனம்
இன்றைக்கு தேர்தலுக்கு ஒத்திகை பார்ப்பது போல திருச்சியில் மாநாட்டை நடத்தினார்கள். அந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் திரள்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் 10,000 பேர் கூட திரளவில்லை. இந்த மாநாட்டில் வரவேற்பு நேரு 2 நிமிடங்கள் பேசினார். அவைத் தலைவரோ, துணைப் பொதுச்செயலாளரோ, சொற்பொழிவாளர்களோ, வேறு நிர்வாகிகள் யாருமே பேசவில்லை. முதலமைச்சர் மட்டுமே சுமார் 40 நிமிடங்கள் பேசினார். ஒரு மணி நேரத்தில் மாநாட்டையே முடித்துவிட்டனர். [Nanjil Sampath]
தவெக ஆட்சியை கைப்பற்றும்
7 மணிக்கு தொடங்க வேண்டிய மாநாட்டை 7 மணிக்கே முடித்துவிட்டார்கள். திமுக அதற்கான முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறது. திமுக அதனுடைய இருப்பை இழந்துவிட்டது. திமுக எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் என்பதை தவிர, அதை ஒரு கட்டமைப்பான கட்சியாக நடத்த முடிகிற வாய்ப்பு இல்லை. தமிழக அரசியலில் புதிதாக பூத்துள்ள தவெக 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து ஆட்சியை கைப்பற்றும். இந்த நம்பிக்கை நாட்டு மக்களிடம் உருவாகியுள்ளது.
விஜய்க்கு நெஞ்சுரம்
எங்கள் தலைவர் விஜய் திமுகவுக்கு சவாலாக இருப்பார். 1967 ஆம் ஆண்டில் காங்கிரஸிடம் இருந்து அண்ணா ஆட்சியை மாற்றினார். 1977 திமுகவிடம் இருந்து எம்ஜிஆர் ஆட்சியை மாற்றி காண்பித்தார். வரலாறு திரும்புகிறது. அண்ணா, எம்ஜிஆர் வழியில் சரித்திரம் படைக்கிற வகையில் தவெக தரணி ஆளும். இந்திய துணை கண்ட அரசியலில் யாரும் நிகழ்த்தாத அதிசயங்களை நிகழ்த்துவோம்.
பாஜக வக்கிர அரசியல்
தேர்தலில் வெற்றி பெறுவோம். எங்களுக்கு நெருக்கடி கொடுப்பது பாஜக பழக்கம். நெருக்கடிகளை எதிர்கொள்வது எங்கள் வழக்கம். ஜனநாயகன் திரைப்படத்திற்கான தணிக்கையை நிறுத்தி வைத்திருப்பது பாஜகவின் வக்கிரமான அரசியல். பராசக்திக்கு அனுமதி கொடுத்தவர்கள், ஜனநாயகன் படத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதை மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரம் எங்கள் தலைவர் விஜய்யிடம் இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications