சிபிஐ ஆபிசில் செந்தில் பாலாஜி! வாய் மூடிய ஊடகங்கள்! லைவ் கவரேஜ் இல்லையா? நாஞ்சில் சம்பத் சுருக்!
சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக கடும் விமர்சனங்களை ஊடகங்களை நோக்கி முன் வைத்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான நாஞ்சில் சம்பத் அனைத்தையும் நேரலை செய்யும் ஊடகங்கள் செந்தில் பாலாஜி குறித்து பேசாதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழகத்தின் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர், அதுவும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றிருக்கும் செய்தி, தமிழ்நாட்டு ஊடகங்களின் கேமராக்களுக்கு மட்டும் ஏன் எட்டவில்லை என்பதுதான் இன்றைய மிகப்பெரிய புதிராக இருக்கிறது.
யார் விமான நிலையம் வந்தாலும் நேரலை செய்யும் செய்திச் சேனல்கள், இவ்வளவு பெரிய அரசியல் நகர்வை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தை விட நகைப்பையே வரவழைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் வைரலாவதற்கு முன்னரே பிரேக்கிங் நியூஸ் போடும் நமது ஊடகங்களுக்கு, டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு ஒரு முக்கியப் புள்ளி விசாரணைக்குச் சென்றது மட்டும் தெரியாமல் போனது எப்படி? ஒருவேளை தமிழக ஊடகங்களின் ஓபி வேன்கள் (OB Vans) அனைத்தும் ஒரே நேரத்தில் 'சர்வீஸ்' செய்ய அனுப்பி வைக்கப்பட்டனவா? அல்லது டெல்லி செல்லும் விமானங்களின் அட்டவணை இவர்களுக்கு மட்டும் ரகசியமாக வைக்கப்பட்டதா?
அரசியல் தலைவர்கள் தும்மினால் கூட அதை "அதிர்ச்சி ரிப்போர்ட்" என்றும், "பரபரப்புத் தகவல்" என்றும் அலறவிடும் செய்தி வாசிப்பாளர்கள், இப்போது மட்டும் ஏன் 'சைலன்ட் மோடில்' இருக்கிறார்கள்? எதிர்க்கட்சிகள் மீது ஒரு சிறு வதந்தி எழுந்தால் கூட, விவாதம் என்ற பெயரில் ஊர் கூட்டிப் பேசும் நடுநிலைத் திலகங்கள், இந்த விவகாரத்தில் மட்டும் ஏன் 'கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடும்' எனப் பூனைக்குட்டி வித்தையைச் செய்கிறார்கள்?
விமான நிலையத்தில் திரை நட்சத்திரங்களை படம் பிடிக்க 24 மணி நேரமும் தவம் இருக்கும் கேமராக்களுக்கு, செந்தில் பாலாஜியின் டெல்லி பயணம் மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை என்றால், அது தொழில்நுட்பக் கோளாறல்ல, அது ஒரு 'ஊடக அரசியல்' என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? நடுநிலைமை பேசும் ஊடகங்கள், சில செய்திகளை மட்டும் 'முக்கியத்துவம் இல்லை' என ஒதுக்குவது, அவர்களின் கேமராக்கள் ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி மட்டுமே திரும்பும் என்பதைக் காட்டுகிறது.மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டியது ஊடகங்களின் கடமை.
ஆனால், இன்றைய சூழலில் சில செய்திகளைத் திட்டமிட்டுத் தவிர்ப்பதன் மூலம், செய்திகளை மறைத்து விடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஊடக நண்பர்களே, உங்கள் கேமராக்களின் லென்ஸைத் துடைக்க வேண்டிய நேரமிது; இல்லையெனில் மக்கள் உங்கள் செய்திகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, முதுகெலும்புள்ள தனிமனித சமூக வலைதளங்களை மட்டுமே நம்பத் தொடங்கிவிடுவார்கள்.
ஊடகங்களின் கண்கள் குருடாகிப்போவதும்; காதுகள் செவிடாகிப்போவதும்; கருத்துச் சுதந்திரம் மலடாகிப்போவதும்; திராவிட மாடல் அரசின் சாதனைகளில் மிக முக்கியமானது என்பதை தமிழக மக்கள் இன்றே உணர்ந்து கொண்டார்கள்;உள்வாங்கிக்கொண்டார்கள்..! வாழ்க ஜனநாயகம்..!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications