தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் மீண்டும் அமைப்பு! தலைவர் யார் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தை மீண்டும் அமைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அதன் தலைவராக நாராயணனை நியமனம் செய்துள்ளார்.
இதேபோல் இவ்வாரியத்தில் அலுவலர் சார்ந்த மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.
நாமக்கல் கே.கே.வீரப்பன் காலமானார்! சகலவிதமான பதவிகளையும் பார்த்தவர்! 2 கட்சிகளில் ஜொலித்தவர்!
அதன் விவரம் வருமாறு;
மீண்டும் அமைப்பு
தமிழகத்தில் பனைமரத் தொழிலாளர்களின் நலனிற்காக 1.09.2006 அன்று கருணாநிதியால் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு கல்வி, மகப்பேறு, திருமணம், விபத்து உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாரியமானது 2010-ஆம் ஆண்டு குமரிஅனந்தனை தலைவராகக் கொண்டு இறுதியாக திருத்தியமைக்கப்பட்டு, இவ்வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் 18.08.2012 அன்றுடன் முடிவடைந்தது.
பனைத் தொழில்
பனைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் இப்போது தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் திருத்தியமைக்கப்பட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது..
நாராயணன் தலைவர்
இந்த அரசாணையின்படி, ஏ.நாராயணன் என்பவரை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராகவும், அலுவல் சார் உறுப்பினர்களாக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
அலுவல்சாரா உறுப்பினர்கள்
இதேபோல் அலுவல்சாரா உறுப்பினர்களாக, வேலையளிப்போர் பிரதிநிதிகளாக அக்ரி பசுமைவளவன்,அந்தோணி ஸ்டீபன், காட்சன் சாமுவேல், கலாவதி, ஆன்டோ பிரைடன், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக ஞானதாஸ், சிங்காரன், சடையப்பன், பழனிசாமி, எடிசன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.