நீங்க அப்பா மாதிரி.. உங்களை பார்க்க ஓடி வந்தேன்! முதல்வரை சந்தித்த நரிக்குறவர் இன மாணவி! நெகிழ்ச்சி
சென்னை: நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார்.
சமீபத்தில் நரிக்குறவர் இன மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோர் தங்களுக்கு உதவி வேண்டி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. தங்களின் பொருளாதார நிலையை கூறி இவர்கள் உதவி கேட்டனர்.
இந்த வீடியோவில் இவர்கள் சரளமாக ஆங்கிலத்திலும் பேசினர். அதில், எங்க அப்பா வேட்டைக்கு செல்கிறார். அதுதான் அவர் காலம் காலமாக செய்யும் தொழில். அதை வைத்துதான் நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம். இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை.

வேட்டை
குருவி சுடுவது, வேட்டையாடுவது இதுதான் எங்கள் தொழில். அதை சொல்ல நான் கூச்சப்படவில்லை. வகுப்பில் உட்கார்ந்தால் கூட மாணவர்கள் நீ என் பக்கத்தில் உட்காராதே. நீ இந்த ஜாதிகார பொண்ணு என்று கூறி ஒதுக்கி வைப்பார்கள். நான் அதை எல்லாம் நானா நினைக்க மாட்டேன். என் அம்மா என்னை பள்ளியில் சேர்த்துவிட்டார். நடப்பது நடக்கட்டும். எதிர்ப்புகளை சமாளித்து, இதையும் கடந்து செல்வோம் என்று உறுதியோடு இருப்பேன்.

நரிக்குறவர்
இப்போது இருக்குறது எப்படி என்றால்.. என்னிடம் சிலர் பழக தொடங்கி உள்ளனர். சிலர் என்னுடன் நட்பாக பழக ஆரம்பித்துள்ளனர். என்னுடைய நண்பர்கள் என்னுடன் நன்றாக பேசி வருகிறார்கள். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. கஷ்டங்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டும். இப்போது அடிபட்டால்தான் வாழ்க்கை. காயத்தோடு ஓட வேண்டும் என்று அந்த மாணவிகள் குறிப்பிட்ட வீடியோ இணையம் முழுக்க கவனம் ஈர்த்தது.

அடிப்படை வசதி
அதோடு தங்களுக்கும், தங்கள் பகுதிக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டி இவர்கள் வீடியோவில் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில்தான் இன்று நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ்.தர்ஷினி ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்தார். அப்போது, அவர்களது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்தார்.

அன்பில் மகேஷ்
இந்த சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இருந்தார். அப்போது மாணவி திவ்யா முதல்வரிடம்.. அங்கிள் உங்களை டிவியில்தான் பார்த்து இருக்கேன். நேரில் பார்க்க சந்தோசமா இருக்கு. உங்களை பார்க்க அழைத்த உடன் பேக்கை போட்டுவிட்டு வேகமாக ஓடி வந்தேன். எங்கள் காலனியில் எந்த வசதியும் இல்லை. நீங்கள் வந்து உதவி செய்யுங்கள். ரொம்ப நன்றாக இருக்கும்.

ஸ்டாலின் சந்திப்பு
உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்களை பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு. நான் என் அப்பாகிட்ட கேட்பது போல உங்களிடம் கேட்டேன். நீங்கள் எங்களுக்கு அப்பா மாதிரிதான். உதவி கிடைக்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. இவ்வளவு தூரம் உங்களை வந்து பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என்று அந்த மாணவி குறிப்பிட்டார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், கண்டிப்பாக உங்களுக்கு உதவுவேன், என்று உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications