மனைவிகளை கணவர் அடிக்க டாப் 7 காரணங்கள் என்ன? அடிப்பதை ஏற்கும் பெண்கள் அதிகமுள்ள மாநிலம் எது?- சர்வே
சென்னை: குடும்ப வன்முறை தொடர்பான மக்களின் மனப்பான்மை இன்னும் ரொம்பவே மாற வேண்டியுள்ளதை சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் 2019-21 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தொடர்பான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
"உங்கள் கருத்துப்படி, கணவன் தன் மனைவியை அடிப்பது அல்லது அடிப்பது நியாயமா..." என்ற கேள்விக்கு ஆண்களும், பெண்களும், கட கடவென்று பதில்களை கொட்டியுள்ளனர்.
மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு
தெலுங்கானா பெண்கள் தாராளம்
அடிப்பதை நியாயப்படுத்தும் பெண்கள் அதிகம் கொண்ட மாநிலம் தெலுங்கானா. 83.8 சதவீதம் பேர் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிப்பது நியாயமானது என்று கூறியுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 14.8 சதவீதம் பேர் மட்டுமே நியாயப்படுத்தியுள்ளார்கள். நாட்டிலேயே இதுதான் குறைவான அளவாகும்.
ஹிமாச்சல பிரதேசம் ஸ்ட்ரிக்ட்
ஆண்களில், கர்நாடகாவில் 81.9 சதவீதம் பேர் அடிப்பது சரி எனக் கூறினர். ஹிமாச்சல பிரதேசத்தில் 14.2 சதவீதம் ஆண்கள் மட்டுமே இவ்வாறு கூறினர். அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசம் மிகவும் நாகரீகமான வாழ்வியலை முன்னெடுப்பது தெரிகிறது.
எதற்காக அடிக்கிறார்கள்
மனைவியை அடிக்க ஏழு சூழ்நிலைகள் பட்டியலிடப்பட்டு கருத்துக் கணிப்பில் ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்பினர். கணவரிடம் சொல்லாமல் மனைவி வெளியே சென்றால், வீட்டையோ குழந்தைகளையோ சரியாக பார்த்துக் கொள்ளாதது, கணவரோடு சரிக்கு சமமாக நின்று வாதிட்டால், பாலுறவு செய்து கொள்ள முன்வராவிட்டால், உணவை சரியாக சமைக்கவில்லை என்றால், கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டால், மாமியார், மாமனார் உள்ளிட்ட கணவன் வீட்டாருக்கு அவமரியாதை செய்தால் என இதுபோன்ற 7 சூழ்நிலைகளில் எதற்காக அடித்தால் ஓகே, எதற்காக வழக்கமாக அடிப்பார்கள் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
சந்தேகம் குறைவு
மாமியாருக்கு அவமரியாதை செய்தல், வீடு மற்றும் குழந்தைகளை புறக்கணித்தல் ஆகிய காரணங்களால் கணவன் மனைவியை அடிப்பதுதான் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கள்ளக் காதல் சந்தேகத்தால் அடிப்பார்கள் என்று கூறிய மனைவிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
பெண்கள் மனநிலை
தெலுங்கானாவைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம் (83.6 சதவீதம்), கர்நாடகா (76.9 சதவீதம்), மணிப்பூர் (65.9 சதவீதம்) மற்றும் கேரளா (52.4 சதவீதம்) ஆகியவை குடும்ப வன்முறையை நியாயப்படுத்தும் பெண்களின் அதிக சதவீதத்தைக் கொண்ட மாநிலங்களாக உள்ளன. இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த ஆண்கள் 14.2 சதவீதம் பேர், 21.3 சதவீதம் பேர் மட்டுமே குடும்ப துஷ்பிரயோகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
பெண்கள் அடிமைத்தனம்
பெண்கள் உரிமைகளுக்காகப் பணியாற்றும் பாப்புலேஷன் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சாரதா இதுபற்றி கூறுகையில், குடும்பத்துக்கும் கணவருக்கும் சேவை செய்வதே தங்களின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் மனதில் இந்த வகையான ஆணாதிக்க மனநிலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலை, ஆழமாகப் பதிந்திருக்கிறது என்றார்.