“உங்கள் தைரியமே ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரண்” பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உண்மைகளை உரக்கச் சொல்லும் பத்திரிகைத்துறை செழிக்க வாழ்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16ஆம் நாள், தேசிய பத்திரிகையாளர் நாளாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியினையும், சேவையையும் பாராட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படுவது பத்திரிகை ஊடகம். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பத்திரிகையாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த தேசிய பத்திரிகை தினத்தில், உண்மையை நிலைநிறுத்த அயராது பாடுபடும் ஊடகவியலாளர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். உண்மைக்கான பயணத்தில் அவர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம்.
சகிப்புத்தன்மையற்ற சகாப்தத்தில், பத்திரிகையாளர்களின் தைரியமே, ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது. அச்சம், சார்பு இன்றி பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications