என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. பின்னணியில் அண்ணாமலை? நயினாருக்கும் செக்!
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விலகியதற்கு பின் அண்ணாமலை இருக்க வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்தவரை எல்லாம் சரியாக இருந்ததாக டிடிவி தினகரன் கூறி இருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது. அதற்கு முன்பாக தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றப்பட்டு, அந்த இடத்திற்கு நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்பட்டார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஓபிஎஸ் மற்றும் அமமுக தரப்பினர், தாங்களும் என்டிஏ கூட்டணியில் இருப்பதாக கூறிக் கொண்டனர்.

அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை அண்ணாமலை பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமியையும், அதிமுகவையும் வம்புக்கு இழுத்து வந்தார் அண்ணாமலை. கூட்டணி ஆட்சி, முதல்வர் வேட்பாளர் யார் உள்ளிட்ட கேள்விகளுக்கு அண்ணாமலை அளித்த பதில்கள் நயினார் நாகேந்திரனுக்கே அதிர்ச்சியை கொடுத்தது.
ஆனால் நெல்லையில் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசியது ஆச்சரியத்தை கொடுத்தது. அண்ணாமலையின் இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் என்ன காரணம் என்று பலரும் ஆலோசித்து வந்தனர். அதேபோல் இன்னொரு பக்கம் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக சாடி வந்த அண்ணாமலை, திடீரென டோனை மாற்றினார்.
சட்டசபைத் தேர்தலில் விஜய்யின் தாக்கல் நிச்சயம் இருக்கும் என்றும் அண்ணாமலை கூறி இருந்தார். இதனிடையே என்டிஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறுவதாக அறிவித்தார். இதற்கு பாஜக மேலிடம் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அதேபோல் அண்ணாமலை மூலமாக பாஜகவிடம் ஓபிஎஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
தற்போது 3 நாட்களுக்கு முன் என்டிஏ கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதற்கு மறைமுகமாக நயினார் நாகேந்திரனையும் விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் நடத்தப்பட்ட விதம் தமக்கு வருத்தத்தை அளிப்பதாக கூறிய அவர், அண்ணாமலை தலைவராக இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது என்றும் கூறி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி கொடுத்த பேட்டி ஒன்றில், அமமுகவை கூட்டணியில் இணைக்கும் முடிவுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்திருந்தார். இதன் மூலமாக பாஜகவுக்கு கூடுதல் தொகுதி கொடுத்து, உள் ஒதுக்கீடாக அமமுகவுக்கு சில தொகுதிகளை கொடுக்க வைக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கருதியதாக கூறப்பட்டது.
அதேபோல் முக்குலத்தோர் சமூகத்தின் ஒரு முக்கியத் தலைவரை தன் பக்கம் கொண்டு வருவதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் ஏற்படும் சேதாரங்களை சரி செய்ய முடியும் என்று கணக்கிட்டிருந்தார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரையும் கடந்த லோக்சபா தேர்தலில் கூட்டணிக்குள் கொண்டு வந்தது அண்ணாமலை தான்.
அதன்பின் அவர்களுக்கும் அதிக நட்பு ஏற்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் டிடிவி தினகரன் குறித்து அண்ணாமலை பெருமையாக பேசி இருக்கிறார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கவும், நயினார் நாகேந்திரனுக்கு செக் வைக்கவும் அண்ணாமலை காய்களை நகர்த்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதற்கேற்ப அண்ணாமலை தற்போது வித்தியாசமான டோனில் பேசி வருகிறார்.












Click it and Unblock the Notifications