அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவின் புரட்சி பாரதம் கட்சிக்கு மீண்டும் ஒரு சட்டசபை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் 'நாங்கள் எதிர்பார்த்தது வேறு. இங்கு நடந்தது வேறு' என்று பூஜை ஜெகன்மூர்த்தி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தான் இன்று இன்று நிர்வாக குழுவை அவர் கூட்டி விவாதித்து முக்கிய முடிவை அறிவிக்க உள்ளார். இதனால் அதிமுக கூட்டணியில் பரபரப்பு தொற்றி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி உள்ளது. இந்த கட்சி தலைவர் பூஜை ஜெகன்மூர்த்தி. இவர், வேலூர் மாவட்டம் கேவி குப்பம் (தனி) சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

இந்நிலையில் தான், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தார். அப்போது பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு மீண்டும் கேவி குப்பம் சட்டசபை தொகுதி வழங்கப்பட்டது.
அதிமுகவுடன் உணர்வோடு
இதுபற்றி பூவை ஜெகன்மூர்த்தி பத்திரிகையாளரை சந்தித்தபோது, ''ஏற்கனவே அதிமுகவுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலை சந்தித்து ஒரு தொகுதி பெற்று வென்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறேன். இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றி இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றி இருக்கிறோம். அதிமுக கூட்டணியில் இருந்தோர் எல்லாம் வெளியே சென்றார்கள். ஆனால் புரட்சி பாரதம் தோழமையோடு, உணர்வோடு அதிமுகவுடன் பணியாற்றி கொண்டிருக்கிறது.
எதிர்பார்த்தது கிடைக்கவில்லை
நாங்கள் 6 தொகுதிகளை வழங்கி 4 தொகுதிகளை ஒதுக்கும்படி கேட்டோம். ஆனால் 3 தொகுதிகள் இருந்தாலும் பரவாயில்லை என்று இருந்தோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி கேட்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அப்போது மூத்த முன்னாள் அமைச்சர்கள் எங்களை அழைத்து சமாதானம் செய்தனர்.
சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெற்று கொள்ளலாம். நாடாளுமன்ற தேர்தலில் உதவியாக இருங்கள் என்று கூறினார்கள். நாங்களும் தேர்தல் பணி செய்தோம். ஆனால் இன்று எதிர்பார்த்து கிடைக்காமல் இருக்கிறது. நாங்கள் 2 தொகுதியாவது கிடைக்கும்? என்று எதிர்பார்த்தோம்.
ஏமாற்றப்பட்டோமா?
நாங்கள் ஏமாந்தமா இல்லை ஏமாற்றப்பட்டோமா என்று தெரியவில்லை. எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. மனவேதனை இருக்கிறது. எங்களின் நிர்வாகிகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. தமிழகத்தில் இருக்கும் நிர்வாகிகள் எல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். கட்சியின் நிர்வாக குழு கூட்டம் கூட்டி இருக்கிறோம். நிர்வாகிகள் எடுக்கும் முடிவை தான் நாளை பதிலாக கூறுவோம்'' என்றார்.
நிர்வாகிகளுடன் ஆலோசனை
அதன்படி இன்று பூவை ஜெகன்மூர்த்தி தனது புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவரது கட்சி அதிமுக கூட்டணியில் தொடருமா? இல்லையா? என்பது ஆலோசனைக்கு பிறகு எடுக்கும் முடிவில் தான் தெரியவரும். இதனால் அதிமுக கூட்டணியில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
கடந்த முறை என்ன நடந்தது?
முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கேவி குப்பம் சட்டசபை தொகுதியில் பூஜை ஜெகன்மூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கி வென்று எம்எல்ஏவானார். இந்த தேர்தலில் பூஜை ஜெகன்மூர்த்தி 84,579 ஓட்டுகள் வாங்கி திமுக வேட்பாளர் சீதாராமனை (பெற்ற வாக்குகள் 73,997) 10,582 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications