இயக்குநர் ப.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில்... மார்கழியில் மக்களிசை..!
சென்னை: இயக்குநர் ப.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சென்னையில் திருவையாறு என்ற கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வரும் சூழலில், மக்கள் இசைக்கான பிரத்யேக நிகழ்ச்சியாக ரஞ்சித் இதனை முன்னெடுத்து வருகிறார்.
பறையிசை, ஒப்பாரி, நாட்டுப்புறப்பாடல், கானா பாடல் என 8 நாட்களுக்கு நாள்தோறும் ஒவ்வொரு தலைப்புகளில் இந்த மக்களிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாட்டுப்புற இசை
கிளாசிக்கல் இசைகளுக்கு இணையான முக்கியத்துவமும், விழிப்புணர்வும் கிராமிய மற்றும் நாட்டுப்புற இசைகளுக்கு கிடைப்பதில்லை என்பதால் மக்களிசை நிகழ்ச்சியை நீலம் பண்பாட்டு மையம் நடத்தி வருவதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இசை என்பதை பொதுவாக பார்க்க வேண்டுமே தவிர அதில் கூட உயர்வு தாழ்வு பார்ப்பதை ஏற்க இயலாது எனக் கூறியுள்ளார்.

சிறப்பு அழைப்பாளர்
8 நாட்கள் சென்னையில் நடைபெறும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் நாள்தவறாமல் இயக்குநர் ரஞ்சித் ஆஜராகிவிடுகிறார். அதேபோல் நிகழ்ச்சியின் நிறைவில் பறையிசை முழங்க நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர் தவறுவதில்லை. இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்களையும் சிறப்பு அழைப்பாளராக அழைத்து வருகிறார் ரஞ்சித்.

வாய்ப்பு மறுப்பு
திறமையான கலைஞர்கள் பலர் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் அவர்களின் திறமையை உலகிற்கு அடையாளம் காட்டும் முயற்சியாக மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை நடத்துவதாக கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி நாளை மறு தினம் 31-ம் தேதி வரை நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கவுரவிப்பு
சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவும் கிடையாது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை அங்கீகரிக்கும் வகையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் கேடயம் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications