2023க்கான நீட் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. பல்வேறு முக்கிய தேர்வு தேதிகளை வெளியிட்ட தேர்வு முகமை
சென்னை: 2023ம் வருடத்திற்கான நீட் தேர்வு தேதிகள் தற்போது தேசிய தேர்வு முகாமை மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நீட் நுழைவு தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கான நீட் தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. 2023ம் ஆண்டிற்கான நீட் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி 2023ம் ஆண்டு மே 7ம் தேதி இந்த தேர்வுகள் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. அதேபோல் பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வான CUET 2023ம் ஆண்டு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடக்கும் என்றும் பின்னர் மீண்டும் ஜூன் 1 முதல் ஜூன் 7 வரை நடக்கும் என்றும் தேசிய தேர்வு முகாமை அறிவித்து உள்ளது.
ஐஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வுகளுக்கான தேதிகளையும் அறிவித்து உள்ளனர். அதன்படி இதன் முதல் கட்ட தேர்வுகள் இந்த வருடம் டிசம்பர் 15ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடக்கும். JEE Main தேர்வின் முதல் கட்ட தேர்வு தேதிகள் ஜனவரி 24, 25, 27, 28, 29, 30 மற்றும் 31, 2023, ஆகிய தேதிகளில் நடக்கும். பிப்ரவரி 1, 2 மற்றும் 3, 2023 ஆகிய தேதிகள் ரிசர்வ் தேதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
JEE Main தேர்வுகளின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் தொடங்கும். ஏப்ரல் 6, 7, 8, 9, 10, 11 மற்றும் 12, 2023, தேதிகளில் இந்த தேர்வு நடக்கும். ஏப்ரல் 13, 15 தேதிகள் ரிசர்வ் தேதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த வருடம் நடந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம்தான் வெளியானது. நாடு முழுக்க 7,78,725 கடந்த முறை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அதில் 3570 சென்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் அவர் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற தமிழ்நாடு மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடமும். தேசிய அளவில் 43வது இடமும் பெற்றுள்ளார். அதேபோல் எஸ்சி பிரிவில் தமிழ்நாடு மாணவர் பிரதாப் இந்திய அளவில் 7ம் இடம் பிடித்துள்ளார். அவர் 686 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்திற்கு அவர் இந்த மசோதாவை அனுப்பி இருக்கிறார். முதல்முறை இந்த மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர். என் ரவி.. இரண்டாவது முறை மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நீண்ட தாமதத்திற்கு பின் அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் இதில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications