திமுக சொல்வது முழுக்க முழுக்க பொய்.. நீட் சமூக நீதியை பாதுகாக்கிறது.. கரு நாகராஜன் பரபரப்பு பேட்டி
சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், நீட் தேர்வு சமூக நீதியைப் பாதுகாக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாட்டிலுள்ள மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதன்படி அனைத்து விதமான மருத்துவ படிப்புகளுக்கும் நீட் மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இதுவரை குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

நீட் தேர்வு
இதனால் தமிழ்நாட்டிலும் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியாக இருந்த போதே நீட் தேர்வுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைப்பாட்டையே திமுக எடுத்தது. தேர்தல் சமயத்திலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கி தரப்படும் என்பதை வாக்குறுதியாகப் பல இடங்களில் திமுக முன் வைத்தது.

நீட் பாதிப்பு குழு
திமுக ஆட்சி அமைந்ததும், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிடம் மாநிலம் முழுவதும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு தொடர்பாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஏ கே ராஜன் தலைமையில் குழு அமைக்கத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர் நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். இது குறித்து ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 5க்கு ஒத்தி வைத்தனர்.

திமுக குழுவா?
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கரு. நாகராஜன், "உச்ச நீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு நீட் தேர்வில் எந்த பாதிப்பும் இல்லை எனத் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டபோதும் ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ கே ராஜன் எதன் அடிப்படையில் இந்த பொறுப்பை ஏற்றார் எனத் தெரியவில்லை. நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை கொண்டவர்களைக் கொண்டு இந்தக் குழுவை அமைத்துள்ளனர். நீட் குறித்து உதயநிதி ஸ்டாலின் மனு கொடுப்பதைப் போல் படம் எடுத்து அதைச் செய்தியாக வெளியிடுகிறார்கள் என்றும் உண்மையில் இது தி.மு.க குழுவா? அல்லது நீட் பாதிப்பை ஆராய அமைக்கப்பட்ட குழுவா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சமூக நீதி காக்கப்படுகிறது
மேலும், நீட் தேர்வு சமூக நீதியைப் பாதுகாக்கிறது என்றும் தேர்தல் சமயத்தில் வாக்குறுதியில் கொடுத்துவிட்டோம் என்பதற்காக நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது என்றும் விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்த இந்தியாவும் நீட் தேர்வை ஏற்கும் நிலையில் தமிழகம் மட்டும் ரத்து செய்திட முடியாது என்று தெரிவித்த அவர், ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவில் விளையாடக்கூடாது என்றும் நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் என்றும் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications